அங்கிட்டு நாராயணசாமி போல இங்கிட்டு ஆளுநரிடம் சிக்கி திண்டாடப் போகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?
தமிழக அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட்டால் தமிழக முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வதால் முதல்வர் நாராயணசாமி உச்சகட்ட அதிருப்தியில் இருக்கிறார். தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் கிரண்பேடி ஸ்டைலில் களமிறங்கப் போவதாக கூறப்படுவதால் தமிழக நிலவரம் என்ன ஆகுமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுடன் கிரண்பேடி நிமிடந்தோறும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். அரசு அதிகாரிகள் முதல்வர் கோஷ்டி, ஆளுநர் கோஷ்டி என பிரிந்து கிடக்கிறார்கள். இதனால் அங்கு நிர்வாகமே முடங்கிப் போயுள்ளது.
பேடி பாணியில்
தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலாலும் கிரண்பேடி ஸ்டைலில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். கோவையில் நாளை ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து நிர்வாக ரீதியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
வலிமையான முதல்வர்கள்
தமிழகத்தில் இதுவரை ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி செயல்பட முடியாத அளவுக்கு வலிமையான முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தனர். இப்போது டெல்லியின் சொல்படி கேட்டு நடக்கிற ஆட்சிதான் நடக்கிறது.
மோதும் நாராயணசாமி
புதுவையிலாவது கிரண்பேடியுடன் சரிக்கு சமமாக மல்லுக்கட்டி நிற்கிறார் முதல்வர் நாராயணசாமி. இங்கேயே ஆளுநர் உத்தரவிட்டுவிட்டார் என்பதற்காக அமைச்சர்கள் வெலவெலத்து போகிற அவலம்தான் இருக்கிறது.
உரிமைக்கு எதிரானது
ஆனால் ஆளுநரின் இந்த தலையீட்டை மாநில உரிமைகளுக்கு விடப்பட்ட சவாலாக எதிர்க்கட்சிகள் கையிலெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தமிழக ஆளுநரின் அதிரடிக்கு பதிலடி என அரசியல் களம் அனல் பறக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.