ஸ்டாலினுடன் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்திப்பு... தீபா விமர்சனத்துக்கு எடப்பாடி பாராட்டு
ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதற்கு தீபா கண்டனம் தெரிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதற்கு கண்டனம் தெரிவித்த தீபாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்திருக்கிறாராம்.
அதிமுகவிலும் ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஓங்கிவிடக் கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். அதேநேரத்தில் சசிகலா குடும்பத்தின் தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் அதிமுகவை மீண்டும் கைப்பற்று சந்தர்ப்பத்துக்காக எதிர்பார்த்துள்ளனர்.

கொங்கு லாபி
இருப்பினும் கட்சியும் ஆட்சியும் எடப்பாடி வசமே இருக்க வேண்டும் என்பதில் கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். நீண்டநாட்களுக்குப் பிறகு, தங்களை நோக்கி வந்த முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இல்லை.

ஸ்டாலினை சந்திக்கும் எம்எல்ஏக்கள்
மேலும் தமது அரசுக்கு எதிராக தி.மு.கவுடன் கை கோர்க்கும் எம்.எல்.ஏக்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனித்துக் கொண்டுதான் வருகிறார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

தீபா கண்டனம்
இந்த மூவருக்கும் முரசொலி பவளவிழா நிகழ்ச்சிக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்டாலினுடனான இந்த சந்திப்பை கண்டித்து அறிக்கை வெளியிட்ட தீபா, இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றார்.

தீபாவுக்கு பாராட்டு
இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த எடப்பாடி, தீபா சொல்வது சரியான கருத்துதான். நான் சொல்ல வேண்டியதை அவர் சொல்கிறார். இதுவும் ஒருவகையில் நல்லதுதான். முன்பு ஓபிஎஸ், ஸ்டாலினிடம் சிரித்துப் பேசியதை துரோகம் என்றார் சசிகலா. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை என சிரித்துக் கொண்டே பேசியிருக்கிறார். அமைச்சர்களும் இந்தக் கருத்தை ஆமோதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications