சசிகலா உத்தரவுகள் செல்லாது என்றால் எடப்பாடியை சட்டசபை குழு தலைவராக நியமித்ததும் செல்லாதா?
சசிகலாவின் உத்தரவுகள் செல்லாது என்றால் எடப்பாடியை சட்டசபை அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக நியமித்ததும் செல்லாதுதானே என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சசிகலாவின் உத்தரவுகள், நியமனங்கள் செல்லாது என்றால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தது மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் கட்சி பதவிகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வராக விரும்பிய சசிகலாவை அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனால் முதல்வராக இருந்த ஒபிஎஸ் தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்த ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார். இதனால் அவர் நீண்ட ஆண்டுகளாக வகித்து வந்த பொருளாளர் பதவியை பறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைத்தார். அதேபோல் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த அவை தலைவராக இருந்த மதுசூதனனின் பதவியை பறித்து செங்கோட்டையனிடம் ஒப்படைத்தார்.
எடப்பாடி பழனிச்சாமி நியமனம்
இதைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழு தலைவராக நியமிக்க எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததால் அவரும் முதல்வராக பதவியேற்று கொண்டார்.
அதிமுக பொது குழு கூட்டம்
இந்நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் இன்று கூடியது. அதில் சசிகலாவின் பொது செயலாளர் நியமனம் ரத்து செய்யப்பட்டதுடன் சசிகலாவின் நியமனங்களும் உத்தரவுகளும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சி பதவிகள் என்னவாகும்
அத்துடன் சசிகலாவால் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட பொருளாளர் பதவியும், செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட அவைத் தலைவர் பதவியும் பறிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டப்படி பார்த்தோமேயானால் சசிகலாவால் முன்மொழியப்பட்டவர்தான் இந்த எடப்பாடி பழனிச்சாமி என்றாலும் அவர் எம்எல்ஏக்களின் ஆதரவோடுதான் முதல்வராகினார். எனவே எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா நியமிக்கவில்லை, முன்மொழிந்தார் என்று வைத்து கொள்வோம். சட்டசபை குழு தலைவர் என்பது பொதுச் செயலாளர் முன்மொழியும் அதிகாரத்துக்கு உள்பட்டதுதான்.
தார்மிக அடிப்படையில்...
எனினும் அதிமுக உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மதிப்பளித்து சசிகலாவால் கைகாட்டப்பட்டு சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தார்மிக அடிப்படையில் பதவி விலகலாம் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறு விலகிவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகினால் தினகரன் போன்றோரின் பேச்சுக்கும், பொதுக் குழு தீர்மானத்தை முதல்வரே மதிக்கவில்லை என்ற மற்றவர்களின் அவப்பெயருக்கும் ஆளாகாமல் இருக்கலாமே என்கிற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.