ஃபெரா வழக்கு: ஏப். 19-ல் டிடிவி தினகரன் கட்டாயம் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ததன் மூலம் அன்னிய செலாவணி மோசடி செய்த டிடிவி தினகரன், வரும் 19,20 ஆகிய தேதிகளில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள பர்க்லேஸ் வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலர்களையும், லண்டன் ஹோட்டல் மூலம் 36.36 லட்சம் டாலர்களையும், 1 லட்சம் பவுண்டுகளையும் டெபாசிட் செய்ததாக டிடிவி தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் தினகரன் மீது அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் நீதிமன்றம் முன்பு டிடிவி தினகரன் ஆஜராகுமாறு உத்தரவிட்டநிலையில் கடந்த 10-ஆம் தேதி இந்த வழக்கானது நீதிபதி மலர் மதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது டிடிவி தினகரன் ஆஜராகாததால் கண்டனம் தெரிவித்த நீதிபதி இன்று 13-ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார. அதன்படி எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போதும் தினகரன் ஆஜராகவில்லை.
இதனால் அதிருப்தி அடை்நத நீதிபதி, வரும் 19, 20 ஆகிய தேதிகளில் எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.