இத்தனை காலமாக பக்தர்கள் வழிபட்டது போலி கந்தர் சிலை.. "ஷாக்" தரும் ஏகாம்பரநாதர் கோவில்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள கந்தர் சிலை திருட்டுப் போய் விட்டதாகவும், தற்போது பக்தர்கள் வழிபட்டு வந்தது போலியான சிலை என்றும் பகீர் தகவல் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தீனதயாளன் சிலை திருட்டு லீலை குறித்த தகவல்களால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள மக்களுக்கு ஒரு கோவில் நிர்வாகமே, இன்னும் சொல்லப் போனால் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையே இப்படி போலி சிலையை வைத்து மக்களை ஏமாற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
உண்மையான கந்தர் சிலை கடந்த 1993ம் ஆண்டே காணாமல் போய் விட்டது. அதன் பிறகு அந்த இடத்தில் வேறு ஒரு சிலையை வைத்துள்ளனர். அந்த சிலையைத்தான் இத்தனை காலமாக பக்தர்கள் வணங்கி வந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. காணாமல் போன கந்தர் சிலை பல ஆயிரம் ஆண்டு பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை உடைத்த ஸ்தபதி
சமீபத்தில் இந்த கந்தர் சிலை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தஞ்சையிலிருந்து வந்த மூத்த ஸ்தபதி முத்தையா சிலையை ஆய்வு செய்தார். அப்போது இது ஒரிஜினல் சிலை அல், போலி சிலை என்று கூறி அனைவரையும் அதிர வைத்து விட்டார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்
இதையடுத்து பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கந்தர் சிலை குறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் கேட்டபோதுதான் உண்மை வெளியே வந்தது. 1993ம் ஆண்டே சிலை காணாமல் போய் விட்டதாகவும், இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அது நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போலி சிலையை வைத்து
ஆனால் இத்தனை காலமாக வேறு ஒரு போலியான சிலையை வைத்து மக்களை ஏமாற்றி வந்துள்ளது கோவில் நிர்வாகம். காணல் போன கந்தர் சிலை தங்கத்தால் ஆனது. ஆனால் போலி சிலையோ வெண்கலத்தால் ஆனது. இதை வைத்து இத்தனை காலமாக உற்சவம் நடத்தி பக்தர்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றியுள்ளனர்.
மேலும் பல மாயங்கள்
இந்த சிலை தவிர மேலும் பல முக்கிய ஆபரணங்களும் கோவிலிலிருந்து காணாமல் போய் விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக மிகப் பெரிய அளவில் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தீனதயாளன் கைவரிசையா?
சென்னையில் மிகப் பெரிய அளவில் சிலைத் திருட்டில் ஈடுபட்டு சிக்கியுள்ள தீனதயாளன் ஏகாம்பரநாதர் கந்தர் சிலை விவகாரத்திலும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. தீனதயாளன்தான் இந்த சிலையைத் திருடினாரா என்ற சந்தேகமும் பலரால் எழுப்பப்படுகிறது.
அரசு விளக்க வேண்டும். விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். இது மக்கள் கோரிக்கையாகும்.