வயிறு எரியுதுங்க.. ஆர்.கே.நகர் அக்கப் போர் தேர்தலுக்கு இதுவரை ரூ. 3 கோடி செலவாம்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக ஆணையம் இதுவரை ரூ. 3 கோடி செலவு செய்துள்ளது. இது வழக்கத்தை விட 5 மடங்கு அதிகம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் இந்த முறை இது வரை மட்டுமே ரூ. 3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இது வழக்கத்தை விட 5 மடங்கு அதிகம்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. ஏனெனில் இந்த தேர்தலின் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே தமிழக அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையெழுத்து உள்ளது.
இதனால் தேர்தல் பரபரப்பு போல ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரும் அனல் பறக்கிறது. இதனால் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தேர்தல் ஆணையம் 21 பறக்கும் படைகள், 21 சிறப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்று சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.
21 பறக்கும் படை
தேர்தல் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் என்று நாடு முழுவதிலும் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகள் சென்னைக்கு வந்துள்ளனர். வழக்கமாக ஒரு வார்டுக்கு இரண்டு பறக்கும் படை என்ற ரீதியில் மொத்தம் 7 வார்டுகளுக்கு 14 பறக்கும் படையினர் மட்டுமே பயன்படுத்தப்படுவர். ஆனால் இந்த முறை ஒரு வார்டுக்கு 3 பறக்கும் படை என்று மொத்தம் 21 பறக்கும் படை பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்காக 900 சிஆர்பிஎஃப் படை
இதே போன்று 900 சிஆர்பிஎஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் படையினருடன் ஆயிரம் மாநில போலீசாரும் தேர்தல் பணியின் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி இரவு நேர ரோந்துப் பணியிலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கத்தை விட 5 மடங்கு அதிகம்
மொத்தத்தில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளுக்காக மட்டுமே ஆணைய்ம இதுவரை ரூ. 3 கோடி செலவு செய்துள்ளது. வழக்கமாக இடைத்தேர்தலுக்கு ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரையில் தான் செலவாகும். ஆனால் இந்த முறை 5 மடங்கு அதிக செலவை ஆணையம் செய்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்துவதற்காக மட்டுமே ரூ. 50 லட்சத்தை செலவு செய்துள்ளது ஆணையம். இது தவிர அதிகாரிகள் பயன்படுத்துவதற்கான வாகனம் மற்றும் இதர செலவுகள் என செலவுப்பட்டியல் மிக நீளமாகியுள்ளது.
என்ன செய்ய வேண்டும் ஆணையம்?
ஒரு தொகுதிக்கான தேர்தலை நடத்துவதற்காக இத்தனை கோடி மக்களின் வரிப்பணம் வீணாகியிருக்கிறது. எனினும் ஆணையத்தால் பணப்பட்டுவாடா புகாரை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் இடைத்தேர்தலுக்காக அதிக பணம் செலவு செய்வதை தவிர்த்து பணப்பட்டுவாடா புகார் வரும் தொகுதியில் இரண்டாவது முறையாக தேர்தல் நடத்தும் போது கடுமையை காட்டும் வகையிலான விதிகளில் மாற்றம் செய்ய வேண்டியது தான் தேர்தல் ஆணையத்தின் இப்போதைய அவசியமான விஷயமாக இருக்கிறது.
அதிரடி தேவை
இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வந்தால் தேர்தலையே ஒத்திவைக்காமல் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், பாரபட்சமின்றி எந்த கட்சி மீது புகார் எழுகிறதோ அந்த கட்சியின் வேட்பாளரே மீண்டும் போட்டியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. விதிகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை என்பதே இப்போதைய தேவையாக இருக்கிறது.
அரசியல் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்
இதே போன்று ஒரு முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டால் அதற்காக செய்யப்பட்ட செலவுத் தொகையை அரசியல் கட்சிகளிடம் இருந்தே பகிர்ந்து வசூலிக்க வேண்டும். கோடிக்கணக்கில் நன்கொடி வாங்கும் கட்சிகள் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டால் அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் கட்டும் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படுவதை தவிர்க்க இந்த விஷயங்களில் ஆணையம் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம் என்பதைத் தான் ஆர்கே நகர் இடைத்தேர்தல் உணர்த்துகிறது.