அதிமுக பெயர், கொடியையும் முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
அதிமுக உடைந்ததால் அக்கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னம் அனைத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மட்டுமின்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்ற பெயரையும் அக்கட்சியின் கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா கும்பல் தலைமையில் ஒரு அணியும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியுமாக பிளவுபட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்கே அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க ஓபிஎஸ் அதிமுக உரிமை கோரியது.
தேர்தல் ஆணையம் உத்தரவு
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் ஓபிஎஸ் அதிமுக புகார் தெரிவித்தது. இதையடுத்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் நேரில் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
டெல்லியில் வாதங்கள்
இதனடிப்படையில் புதன்கிழமையன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இந்த வாதங்களைக் கேட்ட பின்னர் 5 மணிநேரம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி நள்ளிரவில் முடிவை அறிவித்தது.
இரட்டை இலை முடக்கம்
அதாவது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்குமே கிடையாது முடக்கப்படுவதாக அறிவித்தது. அத்துடன் அஇஅதிமுக என்ற பெயரையும் அக்கட்சியின் கொடியையும் முடக்கியும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவும் முடக்கம்
தற்போதைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் அதிமுக என்ற கட்சியே முடக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக(ஜா), அதிமுக(ஜெ) என பிளவுபட்டது. தற்போது 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அத்தகைய பரிதாப நிலையை சந்தித்துள்ளது அதிமுக.