தென்மாவட்டத்தில் களைக்கட்டும் தேர்தல்
நெல்லை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த இரு நாட்களாக களைகட்டத் தொடங்கியுள்ளது. தலைவர்களின் பிரச்சாரமும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்னும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் களம் இறங்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இம்மாத இறுதியில் தமிழகம் வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஜேசுராஜுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு சுப. உதயகுமார் நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் தன் முதல்கட்ட பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று ஆம் ஆத்மிக்கு தேர்தல் அலுவலகம் திறக்க முடிவு செய்து பணிகளை செய்த நிலையில் அந்த அலுவலகத்தை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மாற்றாக வேறு அலுவலகத்தை அவர்கள் திறந்துள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆம் ஆத்மியினர் தூத்துக்குடியில் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மொத்தத்தில் தென் மாவட்டங்களில் தேர்தல் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.