செங்கோட்டை அருகே மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்.. தென்னை, வாழை சேதம்
வடகரை பகுதியில் யானைகள் விளைநிலங்களை பாழ்படுத்தி வருகின்றன.
வடகரை: செங்கோட்டை அருகே உள்ள வடகரை பகுதியில் மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை பலா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி வடகரை, பண்பொழி, மேக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மா, தென்னை, பலா, வாழை போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கோடை காலங்களில் இங்குள்ள யானை, சிறுத்தை காட்டுப்பன்றி, போன்ற வன விலங்குகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் வடகரை அடவிநயினார் அணை, சென்னாபத்து , சின்னக்காடு போன்ற வன பகுதிகளில் வன விலங்குகள் புகுந்து வருகிறது. தற்போது மாங்காய் சீசன் தொடங்கி இருப்பதால் தோப்பிற்குள் வரும் யானைகள் மா மரத்தின் கிளைகளையும் ஏராளமான மாங்காய்களையும் தின்று அழித்து வருகிறது.
கடந்த சில தினங்களில் மட்டும் விவசாயி ஜாகீர் உசேன், முகமது கனி, அய்யப்பன் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 150க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 10க்கும் மேற்பட்ட பலா மரங்களையும் ஞாயிற்றுகிழமை இரவு சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் விளை நிலங்களுக்குள் செல்வதற்கே பயப்படுகின்றனர்.
வனத்துறையினர் வனவிலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீரை விலங்குகள் வசிக்கும் பகுதிகளிலேயே கிடைத்திட தொட்டிகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் அகழிகள் மற்றும் மின்சார வேலிகள் அமைத்து வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.