மதுரையில் பட்டபகலில் சுற்றிவளைக்கப்பட்ட ரவுடிகள்... போலீசின் சீக்ரெட் என்கவுண்டர் திட்ட பின்னணி!
மதுரை திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர்சாவடியில் வீட்டில் பதுங்கி இருந்த ரவுடிகள் இருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Recommended Video
மதுரை : மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்த ரவுடிகளை போலீசார் பிடிக்கச் சென்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரவுடிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் மதுரை மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் மஃப்டியில் அந்த பகுதியை நோட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு ரவுடிகள் பதுங்கி இருப்பது உண்மைதான் என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
போலீஸ் குவிப்பு
போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்காப்புக்காக என்கவுண்டர்
ரவுடிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் வீட்டை நெருங்கியுள்ளனர். அப்போது சுதாரித்த ரவுடிகள் போலீசார் வருவதைக் கண்டு தங்களிடம் இருந்த துப்பாக்கியை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் பதிலுக்கு சுட்டதில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி இருவரும் உயிரிழந்தனர்.
19 கொலை வழக்குகள்
இவர்களுடன் இருந்த மற்றொரு ரவுடி தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. முத்து இருளாண்டி தொழிலதிபர்களை கடத்திச் சென்று மிரட்டி பணம் பறிப்பதையே தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 19 கொலை வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.
மதுரையில் 5 ஆண்டுக்குப் பிறகு என்கவுண்டர்
இதே போன்று ரவுடி சகுனி கார்த்தி மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மதுரை மாநகரில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்கவுண்டர் நடந்துள்ளது, மனித உரிமைகள் ஆணையத்தின் எதிர்ப்பு காரணமாக இதுவரை என்கவுண்டர் நடக்கவில்லை, இந்நிலையில் பட்டபகலில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் மதுரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.