ஏரி, குளங்களை ஆக்கிரமித்ததால்தான் வெள்ளத்தில் மிதக்கும் நிலை.... ஹைகோர்ட் கடும் சாடல்
சென்னை: ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமித்ததால்தான் வெள்ளத்தில் மிதக்க வேண்டிய நிலை உருவாகிறது; நீர்நிலைகளை எந்த ஒரு காரணத்துக்காகவும் ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
அம்பத்தூர் கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். நீண்டகாலமாக பயன்படுத்தாத நீர்நிலைகளில் ஆக்கிரமித்தோருக்கு பட்டா வழங்கலாம் என்ற அரசாணையின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கலாம் என தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் மற்றொரு வழக்கில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்று மற்றொரு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது.
இப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு டிவிஷன் பெஞ்சுகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு இவ்வழக்குகள் மாற்றப்பட்டன.
இதை விசாரித்த அந்த பெஞ்ச், ஏரி, குளம் ஆகியவை பொதுமக்களின் சொத்து. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இல்லை. அனைவருக்குமே இதில் பெரும் பங்கு இருக்கிறது.ஒரு அரசே சட்டங்களை மறந்து இயற்கை ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதை மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இத்தகைய நீர்நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
கடந்த 2005-ம் ஆண்டும் தற்போதும் வெள்ளத்தால் பெரும் உயிரிழப்புகளும் பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதால்தான் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து நீண்டகாலம் இருந்தாலும் அதற்காக பட்டா வழங்க முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளது.