கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக போலி நிறுவனத்தில் வேலை? காவல் நிலையத்தில் பட்டதாரிகள் புகார்
கோவை: கோவை மாவட்டத்தில். கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்த நிறுவனம் ஓன்று போலியானது எனகூறி பட்டதாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் சரவணம் பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில தனியார் கல்லூரிகளில் என்ஜினீயரிங் படித்து முடித்த பட்டதாரிகள் பலர் ஒன்றிணைந்து இந்த புகார் அளித்துள்ளனர்.
பட்டதாரிகள் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து முடித்தோம். கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதில் கோவை சரவணம்பட்டியில் செயல்படும் 'கனக்டிங் வேல்டு' என்ற தனியார் நிறுவனமும் பங்கேற்றது.
அந்த நிறுவனம், மொத்தம் மூன்று கல்லூரிகளை சேர்ந்த 450 பேரை தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்தது. பின்னர் வேலையில் சேர பணி உத்தரவும் வழங்கியது.
அந்த நிறுவனம், சம்பளம் செலுத்த வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனகூறி ஒவ்வருவரிடம் இருந்தும் ரூ.1000 பெற்றுக் கொண்டது. இந்நிலையில், வேலையில் சேரும் நாளில் தான் அது போலி நிறுனவனம் என எங்களுக்கு தெரியவந்தது.
இது மாதிரியான போலி நிறுவனங்களை, கல்லூரி எவ்வாறு கேம்பஸ் இன்டர்வியூ நடத்த அனுமதித்தது என தெரியவில்லை.
இந்த நிறுவனம் இதே போல பலரிடம் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் மேலாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.