குடல் கூட சீக்கிரம் சுத்தமாய்ரும். எண்ணூர் கடல் சுத்தமாக 10 வருஷமாகுமாம்... ஷாக் ரிப்போர்ட்!
எண்ணூர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் முற்றிலும் சரியாக 10 ஆண்டுகள்ஆகும என்று தேசிய கடல்நீர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் கசிந்ததையடுத்து ஏற்பட்ட பேரிடரில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தேசிய கடல்நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி ஈரான் நாட்டிலிருந்து எரிவாயுவை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து நாட்டின் எம்.பி.டபிள்யூ மாப்பிள் என்ற சரக்குக் கப்பலும் துறைமுகத்துக்கு 32 மெட்ரிக் டன் அளவிற்கு கச்சா எண்ணெயுடன் வந்த மும்பையின் டான் காஞ்சிபுரம் கப்பலும் நேருக்கு நேரு மோதிக் கொண்டன.
இதில், பல ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால், எண்ணெய் கசிவு எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியது. இதில் ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கின.
மிகவும் பாதிப்பு
கடலில் கலந்த எண்ணெய்யை அகற்றும் பணியில் கடலோர பாதுகாப்பு படை, மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர். இதனால், கடலை நம்பி இருந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய கடல் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் எண்ணூர் முதல் மெரீனா கடற்கரை வரையிலான பகுதி எண்ணெய் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எப்படி இருக்கிறது கடல்?
ஜனவரி 30ம் தேதி முதல் மார்ச் மாதம் வரையிலான இந்த ஆய்வில் சென்னையின் கடல்பகுதி பாதிப்பு குறித்து தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக எண்ணூர்- மெரீனா கடற்கரை மிகுந்த ஆபத்தில் இருக்கிறதாம்
மெரீனா- கோவளம்
மெரீனாவின் தெற்கு பகுதி முதல் கோவளம் வரையிலான கடல் பகுதியில் மிதமாக பாதிப்புதான்ம். அதேபோல் பழவேற்காடு- எண்ணூர் வரையிலான கடற்பரப்பு மிதமான பாதிப்பையும் சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் அறிக்கை
எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆமை இனப்பெருக்க காலமான ஜனவரி மாதத்தில் ஏராளமான ஆமைகள் செத்து கடலில் மிதந்து கரை ஒதுங்கியதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது. எண்ணெய் கசிவிற்கு பிறகு கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன் மூன்றுமடங்கு அதிகரித்து காணப்படுவதாகவும், எண்ணெய் கசிவு முற்றிலும் சரியாக 10 ஆண்டுகள் ஆகும் என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு தேசிய கடல்நீர் மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.