ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கோருவது அபத்தம்.... சசி கணவர் நடராஜன் பொளேர்
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அபத்தமானது என்று சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று ஓ.பன்னீர் செல்வம் கோருவது அபத்தமானது என்று சசிகலா நடராஜன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அச்சின்னத்தை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் டெல்லி புரோக்கர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயற்சித்தார்.
இதனால் தினகரனை போலீஸார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள், முன்னாள் நிர்வாகிகள் சந்தித்தனர். கூவத்தூரில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததாலும், அமைச்சர் பதவி அளிப்பதாக வாக்களித்தவர்களுக்கு அப்பதவி அளிக்காததாலும் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ-க்கள் தினகரன் தலைமையில் 3-ஆவது அணியாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

நடராஜனுடன் சந்திப்பு
ஜெயலலிதா இறந்து 6 மாதங்களாகியும் இன்னும் அதிமுகவில் உள்கட்சி பூசல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருப்பது குறித்து நியூஸ் எக்ஸ் சேனலுக்கு சசிகலாவின் கணவர் நடராஜன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், அதிமுகவில் நான் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்புகிறேன். எந்தவித பதவியும், பொறுப்பும் எனக்கு வேண்டாம்.

தினகரன் தலைமையில் புதிய அணி
எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும்தான் உள்ளனர்.கொஞ்ச நாள்களில் இணைந்து விடுவர். தினகரன் தலைமையில் அணியெல்லாம் கிடையாது. அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் தினகரன் சிறை சென்று வந்துள்ள நிலையில் அவரை எம்எல்ஏ-க்கள், எம்பிக்கள் மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தனர். மற்றபடி அணியெல்லாம் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகதான் உள்ளனர். ஊடகங்கள்தான் தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்திப்பு விவகாரத்தை பெரிதுப்படுத்துகின்றன.

விருப்பமில்லாத ஜெ.
எம்ஜிஆர் மறைந்த பிறகு அந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டன. எனினும் ஜெயலலிதாவுக்கு அரசியலுக்கு வர விருப்பம் இல்லையென்றாலும் அவரை ஊக்கப்படுத்தி அரசியலுக்கு வரவழைத்து எம்ஜிஆர் விட்டு சென்ற அதிமுக மேலும் வளர்ச்சி அடைய செய்தோம். தனது விருப்பமின்மையை ஜெ.வே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜானகி அணியில் ஓபிஎஸ்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அணியிலிருந்த ஓபிஎஸ்ஸை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்து அவருக்கு போடியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தந்தவர்கள் நாங்கள்தான். நானும் சசிகலாவும் இல்லையெனில் அவர் இந்த அளவுக்கு வந்திருப்பாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

தனிப்பட்ட விருப்பம்
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா சுயநினைவோடுதான் இருந்தார். அவரது விருப்பத்தின்பேரிலேயே யாரையும் அனுமதிக்கவில்லை. அவர் யாரை அழைத்தாரோ அவரை மட்டும் உள்ளே அனுமதித்தோம். அவர் மாநிலத்தின் முதல்வர் மட்டுமல்ல. தனி மனிதர். அவருக்கென்று சுயஉரிமைகள் உள்ளன. வெறும் லுங்கி அணிந்து கொண்டு என்னால் யாரையும் சந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண்ணால் அவ்வாறு செய்ய முடியாது. குறிப்பாக சினிமா நட்சத்திரங்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முறையான ஆடை அணிந்திருக்காத நிலையில் அவர்கள் யாரையும் சந்திக்க அனுமதித்ததில்லை. அவர்களுக்கான இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டதில்லை.

திட்டமிட்ட நாடகம்
சென்னையில் இருக்கும் போது எந்த நிபந்தனையுமின்றி அதிமுகவின் இரு அணிகளும் இணைய விருப்பம் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், அவரது சொந்த ஊர் சென்றதும் ஏன் சசிகலா குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை போட்டார் என்பதன் பின்புலத்தில் யார் உள்ளனர் என்பது இந்த உலகமே அறிந்த விஷயம் என்றார் நடராஜன்.












Click it and Unblock the Notifications