சசிகலா குடும்பத்தையே அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும்... நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ் கோஷ்டி
ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தையே அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோஷ்டியின் கேபி முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தினகரனை மட்டுமல்ல சசிகலா குடும்பத்தினரையே அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் அணி நெருக்கடி கொடுத்து வருகிறது.
தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தது செல்லாது என்று எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை, சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் ஆகிய இரு நிபந்தனைகள் நிறைவேற்றினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். தினகரனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்.
கட்சியில் தினகரனை சேர்த்ததையே நாங்கள் ஏற்கவில்லை. தற்போது அவர்களாகவே நீக்குவதாக கூறுகிறார்கள். ஏதோ எடப்பாடி அணியினர் தற்போதாவது விழித்துக் கொண்டார்களே.
இந்த விழிப்பு தினகரனோடு நின்று விடாமல் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் நீக்க வேண்டும். ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி என்பது யூகமே.
கொள்கைகளோடு உள்ள ஓபிஎஸ்ஸுக்கு பதவிகளை கொடுத்து சரி செய்ய முடியும் என்று எண்ணி விடாதீர். அவ்வாறு பதவி கொடுக்கப்படும் என்று ஊடகங்கள்தானே சொல்கின்றன. இணைப்புக்காக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர்கள் மட்டுமே கூறிவருகின்றனர்.
இவ்வாறு கேபி முனுசாமி கூறினார்.