கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை என்று சொல்வதா?- போலீஸை கண்டித்து இசக்கி முத்து தம்பி மறியல்
இசக்கி முத்துவை குறித்து போலீஸார் தவறான தகவல்களை தெரிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த அவரது தம்பி கோபி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை: இசக்கி முத்து ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்கினார் என போலீஸார் தவறான தகவல்களை தெரிவித்துள்ள நிலையில் அவரது தம்பி கோபி சாலை மறியிலில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து, இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்கள் சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியதாகவும் அவர்கள் மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். எனினும் போலீஸாரும் கந்து வட்டிகாரர்களுக்கு சாதகமாகவே பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் 6 முறை புகார் மனு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் இசக்கி முத்து தன் மனைவி, இரு குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். இந்நிலையில் 70 சதவீதம் தீக்காயமடைந்த 4 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அன்றைய தினமே சுப்புலட்சுமியும் இரு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து இசக்கிமுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் இசக்கி முத்து பல்வேறு தரப்பினரிடம் வட்டிக்கு வாங்கி வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். மேலும் உறவினர்களிடம் கடன் பெற்று மற்றவர்களுக்கு வட்டிக்கு கடன் அளித்தனர் என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சிகிக்சை பெற்று வந்த இசக்கிமுத்துவும் இன்று உயிரிழந்துவிட்டார். இதையடுத்து இசக்கி முத்து மீது போலீஸார் உண்மைக்குப் புறம்பான செய்திகளை கூறுகின்றனர் என்று குற்றம்சாட்டிய இசக்கி முத்துவின் தம்பி கோபி போலீஸாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். அவருடன் சேர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.