டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கு மெடிக்கல் சீட் கொடுத்ததே ஜெ.தான்.... வைரலாகும் சட்டசபை குறிப்புகள்!
சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தன்னுடைய மகளுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டாவில்தான் மெடிக்கல் சீட் வாங்கினார் என்ற பாலபாரதியின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் சட்டசபை குறிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகின்றன.
நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், அனிதாவின் தற்கொலை குறித்தும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசிவருகிறார். அவருடைய கருத்துக்கு, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பிவருகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததன் பேரில் அவருடைய மகளுக்கு மருத்துவ இடம் கிடைத்தாகவும் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.
திடுக் பதிவு
குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு சிஎம் கோட்டாவில் சீட் வாங்கிவிட்டு, 1176 மதிப்பெண் பெற்ற ஏழை மாணவி அனிதா விவகாரத்தில் நீட் தேவை என்று வேறொரு நீதியை ஏன் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகிறார் என்றும் பாலபாரதி அந்தப் பதிவில் பதிவிட்டு அதிரவைத்தார்.
மறுத்த கிருஷ்ணசாமி
இந்தத் தகவல், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், நான் அந்த பொம்பளைய (பாலபாரதியை) சட்டமன்றத்தில் பார்த்ததே இல்லை என்று டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
சாட்சி சொன்ன ஜவாஹிருல்லா
முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சொல்வது முற்றிலும் உண்மை என்று மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவும் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியுள்ள அவர், கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறுவது முற்றிலும் உண்மை. கிருஷ்ணசாமிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த நான் சாட்சி. 14-வது சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமிக்கு 6-வது இருக்கையில் அமர்ந்திருந்தவர் பாலபாரதி. காவி கண்ணாடிக்காரருக்கு உழைக்கும் மக்களின் பிரதிநிதி கண்ணுக்குத் தெரிய மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
அவைக்குறிப்பு நகல்
இந்நிலையில் சட்டசபை குறிப்புகளின் பிரதிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 7.1.2015ல் வெளியிடப்பட்ட அந்த சட்டம்ன்ற பேரவை நடவடிக்கைகள் புத்தகத்தில் பக்கம் 173ல் கிருஷ்ணசாமி குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளதாவது:
டாக்டர் கிருஷ்ணசாமி பேசியபோது கல்லூரிகளிலும், ஏபிஆர்ஓ நியமனத்திலும் பாகுபாடு பார்க்கப்படுவதாக இங்கே சொன்னார்கள். ஜெயலலிதா எந்த நிலையிலும் பாகுபாடு பார்க்கமாட்டார்.அனைத்து மக்களையும் ஒரு சேரத்தான் பார்ப்பார், அவர் நல்ல பல காரியங்களை தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கிறார். உறுப்பினரின் கிருஷ்ணசாமியின் குழந்தைக்குக் கூட மருத்துவ மேற்படிப்பில் ஜெயலலிதா இடம் வழங்கியிருக்கின்றனார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த சபை குறிப்பில் இடம்பெற்றுள்ளது.
என்ன சொல்வார்?
தமது மகளுக்கு மருத்துவ சீட் வாங்கினார் கிருஷ்ணசாமி என்று பாலபாரதி சொன்னதற்கு அவரைத் தெரியாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். ஆனால் அவைக் குறிப்பில் இடம் பெற்றுள்ள இந்த வாசகங்களுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.