மாட்டுக்கறி, தீயசக்தி, ஜெ சொத்துக்கள்... கரூரில் கலந்து கட்டி அடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கரூர்: தமிழக மக்கள் தான் எல்லாம் என கூறும் ஜெயலலிதா அவருடைய சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். எனக்கு மாட்டுக்கறி சாப்பிட பிடிக்கும் தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறி திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசப்போகிறார் என்றாலே அங்கே ஊடகவியாலாளர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடும். ஏதாவது பஞ்ச் வைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்,நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன், தமிழகம் தீயசக்தியின் பிடியில் இருந்து விடுபடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்று கூறினார். ( தீய சக்தி என்று யாரை சொன்னாரோ அவருக்குத்தன் வெளிச்சம்)
காமராஜ் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. மதுவிலக்கு கொண்டு வரும், லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்தும் கட்சிகளுடன்தான், காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கும் என்றும் ஒரே போடாக போட்டார். வரும் சட்டசபை தேர்தலில், பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி சுட்டிகாட்டும் கூட்டணி கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆறுதல் கூறாத ஜெயலலிதா
சென்னையில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது, முதல்வர் ஜெயலலிதா மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. வெறும், 10-நிமிடம் ஹெலிகாப்டரில் சுற்றி பார்த்தால் போதுமா என்று கேட்டார்.
பதவி விலகுவாரா?
கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர், 90வயதை கடந்த நிலையிலும், மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினர். அந்த எண்ணம் ஜெயலலிதாவுக்கு ஏற்படவில்லை. மக்களை சந்திக்க முடியாத ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
சொத்துக்களை எழுதிவைப்பாரா?
தமிழக மக்கள் தான் எல்லாம் என கூறும் ஜெயலலிதா அவருடைய சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கவேண்டும். எந்த தியாகமும் செய்யாத ஜெயலலிதாவுக்கு, தகுதியை மீறி மக்கள் முதல்வர் பதவியை அளித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்த நன்மையையும் ஜெயலலிதா செய்யவில்லை.
அயோக்கியர்கள்
தமிழகத்தில் உள்ள அத்தனை அமைச்சர்களும் அயோக்கியர்கள். கரூரை சேர்ந்த செந்தில்பாலாஜி, தலைமையை ஒழுங்காக கவனிக்கவில்லை என்பதற்காக பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிகிறது. கேட்டால், முதல்வர் ஜெயலலிதாவின் தோழிகளுக்கு நெருக்கம் என்கின்றனர்.
தைரியம் இருக்கிறதா?
அ.தி.மு.க., அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பல நாட்கள் ஆகியும் யாரும் பதில் சொல்லவில்லை. தைரியம் இருந்தால் மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு போடட்டும். உலக அளவில் இந்தியாவுக்கு இருந்த நற்பெயர், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு கெட்டு விட்டது.
மாட்டுக்கறி ருசி
மாட்டுக்கறிக்கும், ஆட்டுக்கறிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. மாட்டுக்கறி தின்றால் தவறு என்கின்றனர். எனக்கும் மாட்டுக் கறியை ரொம்ப பிடிக்கும். அதில் என்ன தப்பு. ஒருவரின் உணவு விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
தனித்து போட்டி
காங்கிரஸ் கட்சியின் நிபந்தனைகளை ஏற்கும் கட்சியோடு துணை நிற்போம். இல்லையென்றால் தனித்து போட்டியிடவும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தயாராக உள்ளனர்.
பணம் வாங்கிக்கொள்ளுங்கள்
வரும் சட்டசபை தேர்தலில், பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி சுட்டிகாட்டும் கூட்டணி கட்சிக்கு ஓட்டு போட வேண்டும். அப்போதுதான் வருங்கால சந்ததியினர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் பஞ்ச் வைத்து பேசி முடித்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.