வசூல் புகாரில் குஷ்பு சிக்கியதால்தான் இளங்கோவன் பதவி விலகினாரா?.. புது பரபரப்பு!
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்ததன் பின்னணியில் கதையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இளங்கோவன் வீழ்ந்ததற்கு குஷ்பு மீதான புகாரே காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்த திருப்பங்களுடன் அரங்கேறிவருகிறது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமாவுக்கு பிறகான காட்சிகள். டெல்லி சென்று ராகுல்காந்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு திரும்பினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆனால் தனது ராஜினாமா பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இளங்கோவன் ராஜினாமா
கடந்த 24ம் தேதியே இளங்கோவனின் ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகவே, 25ம் தேதி ஊடகங்களில் தகவலை வெளியிட்டார் கோபண்ணா. இதில் அதிர்ச்சியடைந்த அவரின் ஆதரவாளர்கள் அவர் வீட்டில் திரண்டனர். அதில் இரண்டு தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
மாவட்ட தலைவர்கள்
இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்களான ரங்கபாஷ்யம் , வி.ஆர். சிவராமன் உள்பட 38 மாவட்ட தலைவர்கள் தங்களது மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். இப்போது வடசென்னை மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராயபுரம் மனோ கடிதம் அனுப்பியுள்ளார்.
இளங்கோவன் சமாதானம்
நானாகத்தான் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். மேலிடம் என்னை திருப்பி அழைத்தாலும் தலைவர் பதவியில் நீடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் யாரும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என அவர்களை இளங்கோவன் சமாதானப்படுத்தினார்.
பின்னணி தகவல்
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி ஏற்றுக்கொண்டதாக ஞாயிறு இரவு தகவல் வெளியானது. இதற்கான பின்னணி தகவலைப் பற்றித்தான் தற்போது பரபரப்பாக பேசி வருகின்றனர்.
குஷ்புவின் வசூல்
காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்ட சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரம் செய்த குஷ்பு, ஒவ்வொரு வேட்பாளரிடமும் ஒரு லட்சம் ரூபாய் அவரது உதவியாளர்கள் வாங்கியதாகவும், திருநாவுக்கரசர் கொடுக்காத காரணத்தினால்தான், குஷ்பு அறந்தாங்கி தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
இளங்கோவனுக்கு ஆப்பு
குஷ்பு தரப்பினரின் வசூல் வேட்டை பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் விசாரணை செய்யவில்லையாம். இதுவும் டெல்லி தலைமையிடம் புகாராக சென்றுள்ளது. குஷ்புதான் இத்தனை நாட்களாக டெல்லியில் லாபி செய்து இளங்கோவனை காப்பாற்றி வந்தார். இப்போது குஷ்புவே புகாரில் சிக்கியுள்ளார்.
புதிய தலைவர் யார்?
இளங்கோவனின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில் புதிய தலைவர் யார் என்பதுதான் இப்போது பேச்சாக உள்ளது. தமிழகத்தில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தலைமை பொறுப்பு கொடுக்கலாம் என்று ஒரு யோசனை காங்கிரஸ் மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் பார்வையாளர்கள் மூலம் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி தலைமை முடிவு
எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை குறிவைத்து தற்போது திருநாவுக்கரசு, சுதர்சன நாச்சியப்பன், வசந்த குமார் ஆகியோர் டெல்லியில் வலம் வருகின்றனராம். சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் தலைவர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருகிறாராம். அனைத்து கோஷ்டிகளையும் அட்ஜஸ்ட் செய்து செல்லக்கூடிய தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.