மோடிக்கு மூத்த அமைச்சர்கள் ஜால்ரா… ஜெ.க்கு அஞ்சும் தமிழக அமைச்சர்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: மத்திய அமைச்சரவையில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் நரேந்திரமோடிக்கு அஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அதேபோல தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கின்றனர் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதியதலைமுறை டிவியின் அக்னிப்பரிட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், லோக்சபா தேர்தல் தோல்வி, லோக்சபாவில் ராகுல்காந்தியின் செயல்பாடு, காங்கிரஸ் கட்சியின் தலைமை, அதிமுகவின் பணப்பட்டுவாடா என சகல விசயங்களையும் பேசினார்.
மிகப்பெரிய தோல்வி
லோக்சபா தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று நினைத்தோம். ஆனால் இதுபோன்ற தோல்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் மிகப்பெரிய வெற்றியோடு காங்கிரஸ் மீண்டு வந்திருக்கிறது.
யார் பொறுப்பு
இந்த தோல்விக்கு யாரையும் பொறுப்பாக சொல்லமுடியாது. சாதனைகளை சரியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை. இதுதான் மிகப்பெரிய தவறு. பாரதிய ஜனதா கடந்த 3 ஆண்டுகளாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
பாஜகவின் நவீன யுக்தி
சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக செய்த பிரசாரத்தை காங்கிரஸ் சரியாக பதிலடி கொடுக்கவில்லை.
வசீகரமான தலைவர்
வசீகரமான தலைவர் என்று ஏற்றுக்கொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை யார் பிரதமர் என்பதை அறிவிப்பதில்லை. மோடிக்கு மிகப்பெரிய பிரச்சார பலம் இருந்தது. ராகுல்காந்திக்கு அந்த பலம் இல்லை. அவர் ஊடகங்களில் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை.
பிரச்சாரத்தில் வரவில்லை
நாடுமுழுவதும் மோடி பிரசார பயணம் மேற்கொண்டார். ஆனால் ராகுல்காந்தியோ, சோனியா காந்தியோ பிரசாரத்திற்குப் போகவில்லை. தோல்வி அதுவும் ஒரு காரணமாகும்.
இலங்கைத்தமிழர் பிரச்சினை
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை மட்டும் காரணமல்ல. ஏனெனில் கள்ளத்தோணியில் போய் சந்தித்த வைகோ தோற்றிருக்கிறார். விஜயகாந்த் கட்சியும் தோற்றது. இலங்கைப் பிரச்சினையில் ஆதரவாக இருக்கிற அனைத்து கட்சியும் தோற்றுள்ளன.
அதிமுகவின் பணப்பட்டுவாடா
அதிமுக மிகப்பெரிய வெற்றி விஞ்ஞான ரீதியாக பணத்தை பட்டுவாடா செய்தனர். எனவேதான் 37 தொகுதிகளில் அவர்கள் வென்றுள்ளனர். அதற்கு தேர்தல் கமிஷனும் உடந்தை.
ரூ. 200 முதல் ரூ.1000 வரை
கூட்டுறவு வங்கிகள் மூலமாக சென்று காவல்துறை, அரசு ஊழியர்கள் மூலம் 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பட்டுவாடா செய்தனர் அதனால்தான் அதிமுக வெற்றி பெற்றது.
யாருமே எதிர்க்கவில்லை
மக்கள் வாக்களிக்க அதிமுகவினர் பணம் கொடுத்தனர். இதை அனைவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. திமுக, பாமக என யாரும் இதை எதிர்த்து போராடவில்லை. நாங்களும் போராடவில்லை.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
ஜெயலலிதா ஆட்சி அனைத்துமே மோசமில்லை, ஆனால் சட்டம் ஒழுங்கு சரியில்லை. 110 விதியின் கீழ் ஜெயலலிதா தினந்தோறும் உரையாற்றுகிறார். தினந்தோறும், நகைப் பறிப்பு, கொலை, கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதையாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
மோடிக்கு ஜால்ரா
மத்திய அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் அனைவருமே மோடிக்கு அஞ்சிக்கொண்டு அவருக்கு ஜால்ரா போடுபவர்களாகத்தான் இருக்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களும் முதல்வருக்கு அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு சுதந்திரம்
தமிழ்நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை. சமஸ்கிருதம், இந்தி திணிக்கப்படுகிறது. இதை எதிர்த்து போராட சுதந்திரம் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் கட்சித்தலைமையை அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது.
சேராமல் போனதால் இழப்பு
லோக்சபா தேர்தலில் திமுக உடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போமா என்று தெரியவில்லை. ஏனெனில் இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளை கூட்டிப்பார்த்தால் கூட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கிறது.
காமராஜர் ஆட்சி
1967ல் இழந்த காமராஜர் ஆட்சியை மீண்டும் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம். 2006ல் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தபோதே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்க வேண்டும் அதை தவறவிட்டுவிட்டோம்.
கோஷ்டி பூசல்
அனைத்து கட்சியிலுமே கோஷ்டி பூசல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் அது வெளிப்படையாகத் தெரிகிறது அவ்வளவுதான்.
தலைமையில் மாற்றம்
காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்றிவிட்டால் மட்டும் போதாது. மக்கள் பிரச்சினையில் போராடவேண்டும். வேகமாக செயல்படவேண்டும். அப்படி இருந்தால்தான் கவனத்தைப் பெறமுடியும்.
24மணிநேரம் உழைக்கவேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 24 மணிநேரமும் உழைக்கவேண்டும் அப்போதுதான் மக்களிடம் செல்வாக்கு பெறமுடியும், அதை வாக்குகளாக மாற்ற முடியும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குபோடவில்லை என்பதுதான் உண்மை என்று ஒரே போடாக போட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
வருத்தம் தெரிவித்த ஈவிகேஎஸ்
கடந்த ஆண்டு புதிய தலைமுறை டிவி சேனல் விவாதநிகழ்ச்சியில் பங்கேற்க போன ஈவிகேஎஸ் இளங்கோவன், ஸ்டுடியோவிலேயே தகராறு செய்துவிட்டு வந்தார். மிரட்டலும் விடுத்தார். இந்த சம்பவத்தை பேட்டியின் போது குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்தார் இளங்கோவன்.