கான்டிராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கு: முன்ஜாமீன் கோரி மாஜி அமைச்சர் பழனியப்பன் மனு
கான்டிராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கில் விசாரணைக்குள்ளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: நாமக்கல் கான்டிராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேநாளில் நாமக்கல் கான்டிராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது.
இதனைத் தொடர்ந்து சில நாட்களில் தமது பண்ணை வீட்டி சுப்பிரமணியன் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. இருப்பினும் சுப்பிரமணியன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடிதத்தில் பழனியப்பன் பெயர்
சுப்பிரமணியன் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் சிபிசிஐடி போலீசார் பழனியப்பனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

சம்மன்
தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். தினகரன் முகாமில் இருக்கும் பழனியப்பனோ கர்நாடகாவின் கூர்க் ரிசார்ட்டில் முகாமிட்டிருந்தார்.

கூர்க்கில் விசாரணை
இதனால் தமிழக போலீசார் கூர்க் ரிசார்ட் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று பழனியப்பன் கைது செய்யப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் தினகரன் இதை மறுத்திருந்தார். இருப்பினும் சிபிசிஐடி பிடியில் பழனியப்பன் இருப்பதாக கூறப்படுகிறது.

முன்ஜாமீன் மனு
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனியப்பனுக்கு முன்ஜாமீன் கேட்டு அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications