சென்னை குப்பைகளை அகற்ற பிற நகரங்களில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் வரவழைப்பு
சென்னை: வெள்ளத்தால் சென்னையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வெளி மாவட்டங்களில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளின் ஓரங்களில் பெருமளவில் குப்பை தேங்கியுள்ளன. பிற பகுதிகளிலும் அடித்துவரப்பட்ட குப்பைகள் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால், சென்னையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1070 துப்புரவு பணியாளர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குப்பைகளை அள்ளிக் கொண்டு செல்ல 52 குப்பை லாரிகள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.