வறட்சி நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொரி... மத்திய அரசு பிச்சை போடுகிறதா? - விவசாயிகள் கொதிப்பு
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது யானைப்பசிக்கு சோளப்பொரி என்று விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இது யானைப்பசிக்கு சோளப்பொரியாக உள்ளது என்றும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு விவசாயம் பொய்த்து விட்டது. இதனையடுத்து தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும். மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும். நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பாக விடுக்கப்பட்டது.
மத்திய குழு கடந்த ஜனவரி 22 முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஆய்வு செய்தது. தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக
தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி ரூ.1,748.28 கோடி மட்டுமே தமிழகத்திற்கு தர பரிந்துரை செய்தது. இத்தகவலை மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த வறட்சி நிவாரண நிதியானது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணமாக சுமார் நாற்பதாயிரம் கோடி கேட்ட நிலையில், மத்தியக் குழுவோ இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கே வறட்சி நிவாரண நிதி தர பரிந்தரைத்திருந்தது.
மத்திய அரசோ வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ரூபாய் மட்டுமே அறிவித்திருப்பது, தமிழக விசவாயிகள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர். பாண்டியன் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக கூறினார். யானைப்பசிக்கு சோளப்பொரி போல வறட்சி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டினார். இதேபோல விவசாயிகள் பலரும் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளனர். கடலில் கரைத்த பெருங்காயம் போல மத்திய அரசு வறட்சி நிவாரணத்தை ஒதுக்கியுள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.