அன்று வாடிவாசலை திறக்க... இன்று நெடுவாசலை மூட... ஏப். 7 முதல் விஸ்வரூபமெடுக்கும் போராட்டம்!
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் விஸ்வரூபமெடுக்க உள்ளது.
புதுக்கோட்டை: தமிழரின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசலை திறக்க வீதியில் இறங்கிய இளையோர் படை இதோ தமிழர் மண்ணையும் பாரம்பரிய விவசாயத்தையும் காப்பாற்ற நெடுவாசலில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் அணி திரள முடிவு செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதலுக்காக தமிழக மண்ணில் நடந்தேறிய அமைதியான அறவழி புரட்சியை உலகமே அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தது. தமிழகத்தின் முதுகில் குத்துவதையே கொள்கையாக கொண்ட மத்திய அரசாங்கம் கிடுகிடுத்துப் போனது.
இதேபோல் இன்னொரு தன்னெழுச்சிப் போராட்டம் எழவே கூடாது என்பதற்காக அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றியும் பார்த்தார்கள்... ஆனால் தமிழக இளைஞர்களும் பொதுமக்களும் அப்படி ஒன்றும் ஓய்ந்து போடவில்லை.
எரிமலையாக வெடித்த புரட்சி
ஹைட்ரோகார்பன் திட்டம் எனும் விளைநிலங்களை பாலைநிலமாக்கும் பாழாய்போன திட்டத்தை தமிழகத்தில் திணித்தது மத்திய அரசு. நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை என கிராமங்கள் தோறும் மவுன புரட்சி எரிமலையாக வெடித்தது.
பாலைநிலமாகிறது தமிழகம்
தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையை பயன்படுத்திக் கொண்டு மாய்மால வாக்குறுதிகளைக் கொடுத்து போராட்டத்தை கைவிடச் செய்தது மத்திய அரசு. ஆனால் மீண்டும் ஹைட்ரோகார்பனை கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு தமிழகத்தை பாலைநிலமாக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது மத்திய அரசு.
பலியாடா தமிழகம்?
மத்திய பாஜக அரசின் பச்சை துரோகத்தை ஏற்றுக் கொண்டு பலியாடுகளாக நிற்க தமிழகம் தயாராக இல்லை... அன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் திறக்கப்பட்ட போர்க்களம் இப்போது நெடுவாசலுக்கு இடம் மாறுகிறது.
அன்று வாடிவாசல்... இன்று நெடுவாசல்
வருகிற 7-ந் தேதி முதல் நெடுவாசலில் திறக்கப்படும் போர்க்களம் தமிழகத்தின் ஒற்றுமையையும் வாழ்வாதாரத்துக்கான உரிமைப் போரையும் பறைசாற்றத்தான் போகிறது... ஆம் வாடிவாசலை திறக்க அன்று போராட்டம்.. .நெடுவாசலில் மையம் கொள்ளப் போகும் நாசகார திட்டத்தை இழுத்து மூட வருகிறது மற்றொரு போராட்டம்!