காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - ஒகேனக்கல் விவசாயிகள் பேரணி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை கண்டித்து ஒகேனக்கல்லில் ஏராளமான விவசாயிகள் பேரணியாக சென்றனர்.
கிருஷ்ணகிரி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா மாநில அரசு, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை கண்டித்தும் இத்திட்டத்தை கைவிடக்கோரியும், ஒகேனக்கலில் பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகள் முதலைப்பண்ணை வரை பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காது என்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பது விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் கவலையாகும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், கர்நாடகா அரசு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமைய்யா, மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் தங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், கர்நாடகத்திற்கு சட்ட ரீதியாகவும், தொழிற் நுட்ப ரீதியாகவும் அணை கட்ட முழு உரிமை உள்ளது என்று கூறினார். கர்நாடக எல்லைக்குள் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதால் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய தேவையில்லை
இதனைக் கண்டித்தும், மத்திய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தியும் ஒகேனக்கலில் பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகள் முதலைப்பண்ணை வரை பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.