கதிராமங்கலம் சென்ற பி.ஆர் பாண்டியன் உள்பட 7 பேர் கைது
கதிராமங்கலம் சென்ற விவசாயிகள் சங்கத்தலைவர் பிஆர்.பாண்டியன் குழுவினர் நடுவழியில் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலம் சென்ற பிஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் பணிகளை தொடங்கியதால் அக்கிராம மக்களுடன் சுற்றுவட்டார கிராம விவசாயகளும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒஎன்ஜிசி பணிகளை தடுக்க சென்ற மீத்தேன் எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அடுத்த இரண்டாம் நாளில் கதிராமங்கலம் சென்ற காவிரி உரிமை மீட்புக்குழு பெ.மணியரசன் உள்ளிட்டவர்களையும் நடுவழியில் கைது செய்தனர்.
மக்களின் போராட்டம் அதிகமான நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த நிலையில் பிஆர்.பாண்டியன் தலைமையில் அவரது சங்க நிர்வாகிகள் குடவாசல் வழியாக கதிராமங்கலம் சென்றனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் பி.ஆர்.பாண்டியன் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், குடவாசல் ஒன்றிய தலைவர் சரவணன், மன்னை ஒன்றிய தலைவர் மனோகரன் குடவாசல் சுரேஷ் மன்னை ஒன்றிய செயலாளர் பி.கே.கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கும்பகோணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கைக்கு பிஆர் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கதிராமங்கலம் யார் சென்றாலும் கைது என்பது விவசாயிகளை அச்சுறுத்தும் செயலாக உள்ளது என்று கூறும் விவசாயிகள் இதே போல நெடுவாசலுக்கும் நடக்கலாம் என்பதால் நெடுவாசல் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.