பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை மோடிக்கு மணியார்டர் அனுப்பிய புதுவை விவசாயிகள்!
பிச்சை எடுத்து சேர்த்த ரூ. 1,356 ரொக்கத்தை மணியார்டர் எடுத்த புதுவை விவசாயிகள் கூட்டமைப்பு விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதை அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை பிரதமர் மோடிக்கு புதுவை விவசாயிகள் இன்று மணியார்டர் மூலம் அனுப்பி வைத்தனர்.
வறட்சி நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 23 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எனினும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என ஆங்காங்கே ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் புதுச்சேரி மாநிலம், காட்டேரிக்குப்பத்தில் விவசாயிகள் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் மூலம் கிடைத்த ரூ.1,356 பணத்தை தபால் நிலையத்தில் மணியார்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் இன்று அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications