விவசாயிகளின் தொடர் மரணம்.. பொங்கல் புதுப்பானைகளை கவிழ்த்து பெண்கள் நூதனப் போராட்டம்
வறட்சியின் காரணமாக விவசாயிகளின் தொடர் மரணம் நடந்து வருகிறது. இதனைத் தடுக்கக் கோரி சென்னையில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் கொண்டாடும் வேளையில் விவசாயிகளின் மரணம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி, பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்ட போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் போது, பொங்கல் வைக்க வேண்டிய புதுப்பானைகளை தலைகீழாக கவிழ்த்து வைத்தும், எலும்புக்கூடுகளை பானையில் வரைந்து வைத்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், "உழவன் சேற்றிலே கை வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்க முடியும்", "உழவர் பொங்கல் திருநாள் துக்கநாள்" , "அரசன் முதல் ஆண்டி வரைக்கும் உணவளிப்பவன் உழவன் என்பதை மறவாதே" என்ற வாசகங்களைத் தாங்கிய பேனர்களைப் பெண்கள் பிடித்துக் கொண்டு கோஷங்களை உரக்க எழுப்பி போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தில் குழந்தைகள் மற்றும் விவசாய அமைப்பினரும் கலந்து கொண்டு விவசாயிகளின் தற்கொலையையும் மரணத்தையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.