கருணாநிதியுடன் பரூக் அப்துல்லா திடீர் சந்திப்பு- காங். கூட்டணிக்காக பேச்சுவார்த்தை?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் ஜேகேஎன்சி கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லா இன்று சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியான சந்திப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை உடனடியாக டுவிட்டரில் பதிவேற்றினார் திமுக தலைவர் கருணாநிதி.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார் பரூக் அப்துல்லா. 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுகவை இணைக்க வேண்டும் என்ற விரும்பியவர். இதற்காக சென்னை வந்து கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க திமுக விரும்பவில்லை. தங்களுக்கு இணக்கமான கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது.
JKNC கட்சியின் தலைவர் எனது நண்பர் திரு.பரூக் அப்துல்லா அவர்கள் என்னை இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தபோது. pic.twitter.com/8iMClADknB
— KalaignarKarunanidhi (@kalaignar89) February 9, 2016
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன. திமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை சிக்னல் காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. கருணாநிதியை சந்தித்து பேசுவதற்காக குலாம் நபி ஆசாத் விரைவில் சென்னை வருவார் என்று கூறப்பட்ட நிலையில் திமுக - காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் நட்பாக உள்ள பரூக் அப்துல்லா இன்று கோபலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, நண்பர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்தாகவும், சட்டசபை தேர்தல் கூட்டணி பேச தான் வரவில்லை என்றும் கூறினார். தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனல்ல என்று கூறிய அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக தொடர்ந்து நீடிக்கும் என்றும், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக சிறப்பாக செயல்படும் என்றும் கூறினார். சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற வாழ்த்து கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.