மும்முனை போராட்டத்தில் சிக்கிய டிபிஐ: உண்ணாவிரதம் இருந்தவர்கள் கவலைக்கிடம்
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் ஒரே நேரத்தில் 4 சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களில் 10க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித் துறை ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 19ம் தேதி முதல் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கமும் டிபிஐ வளாகத்தில் கடந்த 20ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
2009ம் ஆண்டுக்கு க்கு பின் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆசிரியர்கள் மயக்கம்
நேற்று முதல் ஆசிரியர்கள் சிலர் மயங்கி விழுந்தனர். இன்று காலையில் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உண்ணாவிரதம் மேற்கொண்ட நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மயங்கிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்புறவு பணியாளர்கள் போராட்டம்
தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக்கோரி, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், 5ம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
7 பேர் மயக்கம்
இதே போல் 5வது நாளாக உண்ணா நிலையில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களில் 7 பேரின் நிலைமையும் கவலைக்கிடைமாக உள்ளது. இவர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் உண்ணா நிலையில் இருந்து வருகின்றனர். இவர்களில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஜாக்டா சங்கம் முற்றுகை
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) 18 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் இன்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே முழக்கமிட்டனர்.
5 அம்ச கோரிக்கை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திடவும், புதிய பென்சன் திட்டம் ரத்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராடி வருகிறோம்.
இதனை 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றோர், 2 பென்சன் பெறுவோர், அரசியல் கட்சியினை சார்ந்த ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஒன்று இணைந்து செயல்பட விடாமல் தடுக்கிறார்கள்.
தொடர் வேலை நிறுத்தம்
எனவே இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுபடி இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது.
அதன் பிறகும் கோரிக்கைகள் ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிபிஐ வளாகம் முற்றுகை
இதனிடையே டிபிஐ வளாகத்தின் தெற்கு பக்க வாயிலில் இருந்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் 300 பேர் உள்ளே நுழைய முயன்றனர். ஒரு பக்கம் ஜாக்டோவும் மறுபக்கம் பகுதி நேர ஆசிரியர்களும் உள்ளே நுழைந்ததால், போலீசார் யாரை கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறினர்.
போராட்டம் தொடரும்
இதையடுத்து இரண்டு தரப்பினரையும் போலீசார் தனித்தனியாக பிரித்து நிறுத்தினர். பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் அனைவருக்கும் கல்வி இயக்க வாசல் முன்பு அமர்ந்து கோஷம் போட்டனர். அப்போது பேசிய அவர்கள், முதல்வர் ஜெயலலிதா எங்களை அழைத்து பேசும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அதன் தலைவர் முருகதாஸ் கூறியுள்ளார்.
போராட்டம் நடத்த தடை
டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.