சென்னை தந்தை,மகன் கொலையில் திருப்பம் – மீண்டும் பிரேத பரிசோதனை!
சென்னை: சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதைக்கப்பட்ட தந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். இந்த நிலையில் செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் தெருவில் வசிக்கும் குமார் என்பவர், "நான் தான் மணியை கொலை செய்தேன்" என்று குடிபோதையில் பேசிக்கொண்டிருந்தார்.
நசரத்பேட்டை போலீசார் குமாரை பிடித்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட மணி அடிக்கடி மது குடித்து விட்டு பல இடங்களில் விழுந்து கிடந்துள்ளார். இதனால் தனக்கு அவமானமாக இருக்கிறது.
எனவே மணியை கொலை செய்யுமாறு அவரது தம்பியும், செம்பரம்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க. துணைத்தலைவரின் கணவருமான தியாகராஜன் என்பவர் கூறியதால் கொலை செய்ததாக குமார் தெரிவித்தார்.
மேலும் மணியின் தந்தை தேவராஜ் என்பவரும் மது குடித்து விட்டு பல பெண்களுடன் பேசிக்கொண்டு இருந்ததால் அவரையும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொலை செய்ததாக குமார் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் தேவராஜ் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாகக் கூறி குடும்பத்தினர் பிணத்தை புதைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தந்தை, மகன் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமார், தியாகராஜன், அவரது மனைவி பவானி, மகள் பாரதி, கார் டிரைவர் சரவணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இதில் பாரதியின் கணவர் செல்வம் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு செல்வத்தை போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் புதைக்கப்பட்ட தேவராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.