புதுக்கோட்டை ஐ.ஓ.பி.வங்கியை கண்டித்து பெண் ஆட்டோ ஓட்டுனர் போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்
வங்கி செயல்பாட்டினை கண்டித்து பெண் ஆட்டோ ஒட்டுனர் போராட்டம் நடத்தினார்.
Recommended Video
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியை கண்டித்து பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவர் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர். இவர் புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் நகை கடன் பெற்றுள்ளார். மேலும் அதே வங்கியில் கார் லோனும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கார் லோனுக்கு தவணை தொகை செலுத்த போதிய நாள் இருந்தும் வங்கி நிர்வாகம் சரோஜா கார் லோன் செலுத்தவில்லை என்று கூறி, அவர் வங்கியில் வைத்துள்ள நகையை ஏலத்திற்கு விடப் போவதாக அறிவித்ததாக கூறப்படுகின்றது,
இதனை கேள்விப்பட்ட சரோஜா வங்கிக்கு சென்று, "காரை எடுத்துக்கொள்ளுங்கள், காருக்கான தொகையை உங்களிடம் கொடுத்துவிட்டு, பிறகு வந்து காரை பெற்றுக் கொள்கிறேன், நகைகளை மட்டும் ஏலத்திற்கு விட வேண்டாம்" என கேட்டு கொண்டதாக தெரிகிறது. ஆனால் வங்கி நிர்வாகம் சரோஜாவின் நகையை 3 லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த சரோஜா, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையில் அமர்ந்து இந்தியன் ஓவர் சீஸ் வங்கியை கண்டித்தும் அவரது காரை திரும்ப தரக் கோரியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரருக்கு ஆதரவாக மற்றொரு பெண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரோஜாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் சரோஜா பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் அவரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.