பெரா வழக்கு... வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரான சசிகலா.. குற்றச்சாட்டுகள் பதிவு
அன்னிய செலாவணி வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் சசிகலா ஆஜராகவுள்ளார்.
சென்னை: அன்னிய செலாவணி வழக்கில் பெங்களூர் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன், சுதாகரன், தினகரன் ஆகியோர் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜரான பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார்.
ஜெ.ஜெ.டிவிக்கு உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது தொடர்பாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரிடமும் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைதாகி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரியதன் பேரில் அனுமதி வழங்கப்பட்டது.
அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான கேள்விகளை அமலாக்கத் துறை முன்கூட்டியே தர வேண்டும் என்று சசிகலா கோரியதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தினகரன் மீதான் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் நேற்று சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
இதையடுத்து இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் சசிகலா ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அவர் 12 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அவர் 12 மணிக்கு ஆஜரானதை தொடர்ந்து எந்தெந்த மொழிகள் தெரியும் என்று சசிகலாவிடம் நீதிபதி கேட்டார். அதற்கு அவர் தமிழ் என்றார். இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையினர் சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதை சசிகலா மறுத்தார். வழக்கின் சாட்சி ஆவணங்களை குறுக்கு விசாரணை செய்ய சசிகலா வலியுறுத்தினார். எனினும் அவர் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார்.