லோக்சபா தேர்தல் 2014: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுவை, வேட்பாளர்கள் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, வாகனங்கள் புடைசூழவோ வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், நூறு மீட்டருக்குள்ளாக, வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்து பிரசாரத்திற்காக செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வேட்பாளர்களின் கணக்கில் வரும் என்பதால், செலவுக் கணக்குகளை கண்காணிக்க ஒரு லோக்சபா தொகுதிக்கு இரண்டு பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அவர்கள் ஓரிரு நாட்களில் தங்களது பணிகளை தொடங்குவார்கள் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனு தாக்கல் முடிவடையும் தினமான ஏப்ரல் 5-ம் தேதி பொதுப் பார்வையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையம், 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் நியமித்துள்ளது.