சென்னை அரசு அச்சகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து- பலத்த சேதம்!!

சென்னை அரசு அச்சகம் 200 ஆண்டுகள் பழைமையானது. கடந்த 1834-ம் ஆண்டு இது கட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவணங்கள் இங்குதான் அச்சடிக்கப்படுகின்றன.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த அச்சகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதில் ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அச்சகத்தில் பைண்டிங் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மற்ற இடங்களுக்கும் பரவியது. அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து 9 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னரும் அப்பகுதியில் புகை மூட்டத்துடன் அனல் வீசியது. இதனால் தீயனைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டே இருந்தனர்.
இந்த விபத்தால் அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. அரசு அச்சகத்தில் கடந்த ஜூன் மாதம் தீவிபத்து ஏற்பட்டிருந்த நிலையில் சில மாதங்களிலேயே மீண்டும் தீவிபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications