கன்னியாகுமரி: கொளுத்தும் வெயிலால் பயங்கர தீ விபத்து- 15 ஏக்கரில் பயிரிடப்பட்ட ரப்பர் மரங்கள் கருகின
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சிந்தன் பொத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த அன்னாசி மற்றும் ரப்பர் மரங்கள் சேதமடைந்துள்ளன.
முள்ளங்கனாவிளை சிந்தன் பொத்தையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அன்னாசி மற்றும் ரப்பர் இலையில் காட்டு தீ பற்றி குபுகுபுவென எரிந்தது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ 15 ஏக்கரிலும் கொளுந்துவிட்டு பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொத்தையில் ஏற்பட்ட தீயை அணைப்பது சிரமம் என்பதால் செய்வறியாது விழித்தனர்.
வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் நீண்ட தொலைவிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைத்தனர். தீ பரவியதில் அப்பகுதியில் உள்ள ரப்பர், வாழை பயிர்கள் என மொத்தம் 15 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.
இந்த தீ விபத்தில் பயிர்கள் அனைத்தும் எரிந்து கருகிவிட்டதால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும், எனவே இந்த சேதத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.