தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர்கள் மோதல் படகு எரிப்பு
தூத்துக்குடி: பெரியதாழை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 11 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். படகுகள் எரிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து ஓரு விசைப்படகில் 11 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகுகள் 30 நாட்டிகல் அப்பாலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பது விதி. அதை மீறி இவர்கள் 11 நாட்டிக்கல் கடல் மைல்லில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
அதை ஓட்டியே பெரியதாழை மீனவ கிராமம் உள்ளது. இதன் காரணமாக பெரியதாழை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலில் வீசியிருந்த வலைகள் சேதமடைந்தன.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் 5க்கும் மேற்பட்ட படகுகளில் 2 கடல் மைல் தொலைவில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் படகை நோக்கி சென்றனர். அதில் இருந்த 11 மீனவர்களை பிடித்து கரைக்கு அழைத்து வந்து பெரியதாழையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் டீசலை ஊற்றி விசைப்படகை எரித்தனர்.
படகின் உரி்மையாளர் எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்போம் என்று பெரியதாழைக்கடல் பகுதி மீனவர்கள் தெரிவித்ததால் பதட்டம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து கூடங்குளம் கடலோர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிடிக்கப்பட்ட 11 மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக டிஎஸ்பி கனகராஜ், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் ஆகியோர் பெரியதாழை மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பிரச்சனை குறித்து இரு தரப்பினரும் கூடி பேசலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட 11 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் அந்த பகுதியில பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.