தங்கச்சிமட மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு... 20ம் தேதி, சுஷ்மாவுடன் பேச்சுவார்த்தை
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக ராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை தற்காலிகமாக
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தங்கச்சிமடத்தில் கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லையில் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவரின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, பிரிட்ஜோவின் உடலை இன்று அடக்கம் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். மேலும் வரும் மார்ச் 20-ஆம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உயரதிகாரிகளை மீனவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அப்போது பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியுதவி கோருவது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துவது உள்ளிட்டவை பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.