குன்னூரில் வெளுத்து வாங்கிய மழை; மதுரையில் கொளுத்திய வெயில்
மதுரை: குன்னூரில் ஒரே நாளில் திடீரென 88 மி.மீட்டர் மழை கொட்டியதால் 200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது, மாடுகள், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அதேநேரத்தில் மதுரை, திருச்சி, சேலத்தில் வெயில் கொளுத்தியதால் வீசிய அனல் காற்றுக்கு மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அதிகாலை 4 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் கிருஷ்ணாபுரம், எம்.ஜி.ஆர். நகர், ஓ.பட்டரை, டிரெட்ல், ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளநீரில் வாகனங்கள்
மழை வெள்ளத்திற்கு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள், 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், அந்த பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அந்த வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
வீட்டிற்குள் வெள்ளம்
கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி, குழந்தைகளுடன் வெளியே தப்பிக்க முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் மேற்கூரையை உடைத்து ஏணி மூலம் வீட்டில் சிக்கியிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
மாடுகள் இறப்பு
எம்.ஜி.ஆர். நகரில் நகராட்சி மாட்டு இறைச்சிக்கூடத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 10 மாடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்தன. புரூக்லேண்ட்ஸ் பகுதியில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
200 வீடுகளில் வெள்ளநீர்
குன்னூர் டானிங்டன் பிரிட்ஜ் ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ளம், டி.பி. காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 வீடுகளில் புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் அங்கு இருந்த பொதுமக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
மண்சரிவு
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் அருகே திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதேபோல் குன்னூர் குப்பைக்குழியிலும், பிளாக் பிரிஜ்ட் அருகேயும் மண் சரிவு ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு தடை
வி.பி. செட் பகுதியில் உள்ள 150 ஆண்டு பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தின் மற்ற பகுதிகள் எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருப்பதால் அந்த பகுதியில் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
ஆட்சியர் ஆய்வு
சம்பவ இடத்தை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், லோக்சபா சி.கோபாலகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் டி.சரவணக்குமார் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு, நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆற்றைத் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் உடனடியாக துவங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தடுப்பணையில் உடைப்பு
இந்த வெள்ளப் பெருக்கிற்கு, பாரஸ்டேல் தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்புதான் காரணம் எனக் கூறப்படுகிறது. பாரஸ்டேல் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிப்பதற்காக பழைய தடுப்பணையைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தடுப்பணையில் கூடுதல் கொள்ளளவு வைக்கப்பட்டதாலும், பழைய தடுப்பணை என்பதாலும், அணையில் சேதம் ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மதுரையில் வெயில்
தமிழகத்தில் ஒருபுறம் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்க நேற்று மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 97 டிகிரி வெயில் பதிவானது. சென்னை, கோவை, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் 90 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
90 டிகிரிக்கு மேல்
சேலம், திருச்சியில் 96 டிகிரி பாரன்ஹீட்டும், கோவை,பாளையங்கோட்டையில் 94 டிகிரியும், வேலூரில் 93 டிகிரியும், தருமபுரியில் 92 டிகிரியும், கடலூர், சென்னை 91 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னதாகவே தென்மாவட்டங்களில் அனல்காற்று வீடுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.