பிளாஷ்பேக்: பெண் வேட்டை – மகளிரின் ரத்தம் குடித்த கொடூரமான 2014!
சென்னை: ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம், புது ஆண்டு கொண்டாட்டமாக பிறந்தாலும், அந்த ஆண்டு கடந்து போகையில் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன.
அதுவும், 2014 ஆம் ஆண்டு பெண்களுக்கான சாபக்கேடாகவே அமைந்துவிட்டது.
பகலில் கூட தைரியாமாக பெண்கள் தெருவில் நடக்க பயம்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நிர்பயா சம்பவம் விதைத்த விதை:
2012 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி அன்று 23 வயதான டெல்லி மருத்துவ மாணவி "நிர்பயா" சம்பவம்தான் பெண்கள் மீதான வன்முறைகளில் அழுத்தமான தொடக்கம்.
6 பேரால் மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, பலத்த காயங்களுடன் உயிரை இழந்தார் அவர். ஆனாலும், ஒரு வகையில் பலாத்காரங்களுக்கு எதிரான போராட்டங்களையும் அதிகரிக்கத்தான் செய்தது "நிர்பயா"வின் இந்த மரணம்.
வலுக்கும் எதிர்ப்புகள்:
பலாத்காரங்கள் குறித்த அணுகுமுறையும், அதற்கான எதிர்ப்புகளும் வலுக்கவும் தொடங்கியது இச்சம்பவத்தால்.
ஆனால், அதையும் தாண்டி 2014 ஆம் ஆண்டு பெண்களின் மீதான வன்முறைகள் அடிமர வேராக தழைத்தோங்கி நிற்கின்றன.
குறையாமல் அதிகரிக்கும் குற்றங்கள்:
இந்த வருடம் மட்டும் பல ஆயிரக்கணக்கான பலாத்கார சம்பவ வழக்குகள் காவல்துறையில் பதிவாகியுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் பலாத்காரத்திற்கு எதிராக போராட்டங்களும், அரசின் செயலற்ற தன்மையை குற்றம் சாட்டும் அமைப்புகளும் வலுப்பெற்றாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னவோ குறையவே இல்லை.
கிழக்கு இந்தியாவில்:
2014 ஆம் ஆண்டு பிறக்கப்போகும் நேரத்தில், அக்டோபர் 2013 இல் முதலாவது சம்பவமாக மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் 16 வயதான இளம்பெண் ஒருவர் இரண்டு முறை பலபேரால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
கொல்கத்தா சம்பவம்:
2014 ஆம் ஆண்டு ஜனவரியில்தான் இது தற்கொலை அல்ல கொலை என்பதே கண்டறியப்பட்டது. கொல்கத்தாவில் ஒரு பெரிய போராட்டமே அந்த இளம்பெண்ணுக்காக நடைபெற்றது. கொல்கத்தாவில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இச்சம்பவம் நடைபெற்றிருந்தது.
மனித சங்கிலி போராட்டம்:
இந்நிலையில் கொல்கத்தாவின் ஹஸ்ரா மோரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு, இன்னொரு புறம் அப்பெண்ணின் குடும்பத்திற்காக நிதி வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
மலைவாழ் பெண் உயிரிழப்பு:
இச்சம்பவத்தின் சூடு அடங்குவதற்குள் 2014 ஜனவரி 22 ஆம் தேதி அதே மேற்கு வங்காளத்தின், சபல்பூர் கிராமத்தில் மற்றொரு பலாத்காரம். 20 வயதான மலைவாழ் பெண் ஒருவர் கொடூரமாக 12 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டார். கொல்கத்தாவிற்கு 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது சபல்பூர் கிராமத்தின் பிர்பும் பகுதி.
கொடூர தீர்ப்பு:
பிர்பும் பகுதி, இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பிறந்த கிராமம். அந்தப்பெண் தன்னுடைய இனம்மல்லாத ஒருவரை காதலித்தார் என்ற குற்றத்திற்காக சாலிஷி சபா என்னும் பஞ்சாயத்தின் சார்பில் இந்த கொடூர தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
நேபாள சிறுமி பலாத்காரம்:
நேபாளத்தில் ஏப்ரல் மாதம், ஒரு சிறுமி, அரசு காண்டிராக்டர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதற்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் மணிப்பூரில் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.
உலுக்கிய உபி சம்பவம்:
2014 ஆம் ஆண்டின் மிகவும் பரபரப்பான மற்றும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய சம்பவம், உத்தர பிரதேசின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்ததுதான்.
மே மாதம் 27 ஆம் தேதியன்று, புதான் மாவட்ட, கட்ரா கிராமத்தில் இரண்டு இளம் சிறுமிகள் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டனர். மாலையில் தங்களுடைய இயற்கை கடன்களுக்காக வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
மரத்தில் தொங்கவிடப்பட்ட சிறுமிகள்:
இவ்விஷயம் போலீசாரின் கவனத்திற்கு சென்ற போதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவு முழுவதும் கிராம மக்கள் அனைவரும் தேடிப்பார்த்த பொழுதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவ்விருவரும் ஒரு மரத்தில் கொடூரமாக தூக்கில் தொங்க விடப்பட்டிருந்தது காலையில்தான் அந்த மக்களுக்கு தெரிய வந்தது.
மறைக்கப்பட்ட மர்மம்:
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. உலக அளவிலான கவனத்தையும் இந்தியாவின் பக்கம் திருப்பியது.
சிறிது நாட்களுக்குப் பின்னர் சிபிஐ வசம் சென்ற இவ்வழக்கில், எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை. மேலும், முதல்கட்ட பரிசோதனை சரியாக நடத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. எனினும், ஏதோ சில காரணங்களுக்காக அது அப்படியே மறைக்கப்பட்டும் விட்டது.
தென் இந்தியா:
தென் இந்தியப் பகுதிகளைப் பொறுத்த வரையில் 2014 ஆம் ஆண்டின் பலாத்கார வழக்குகளில் உச்சத்தில் இருப்பது கர்நாடகா. முக்கிய பள்ளிக் கூட சிறுமிகள்தான் அங்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
அங்கு பதிவான வழக்குகளில், 100க்கு 90, 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மீதான வன்முறையாகும். அதுவும் பள்ளிக்கூடத்திற்கு உள்ளாகவே நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு பள்ளி சம்பவம்:
இந்த பிரச்சினை மேலும் வலுவடைந்தது ஜூலை 22 ஆம் தேதியன்றுதான். ஆறு வயதான சிறுமி ஒருவர் பெங்களூரு பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டதைப் பற்றி கேட்ட நிருபர்களிடம் "உங்களுக்கு இதைவிட்டா வேற நியூஸே இல்லையா?" என்று கேட்டு பிரச்சினைக்கு வித்திட்டார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
போராட்டம் செய்த பெற்றோர்:
பெங்களூருவின் மிகப்பிரபலமான அப்பள்ளிக்கு வெளியே நூற்றுக்கணக்கான பெற்றோர் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து, சித்தராமையா மீண்டும், இவ்வழக்கில் எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில் மீண்டும் ஜூலை 11 ஆம் தேதியன்று மற்றொரு சம்பவம். 22 வயதான் இளம்பெண் ஒருவர் பிராசேர் நகரில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
ஸ்கேட்டிங் பயிற்சியாளரால் கொடுமை:
பெங்களூருவின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் மீண்டும் ஒரு சிறுமி, ஸ்கேட்டிங் பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர்மேல் குண்டர் சட்டம் பாய்ந்தது.
நவம்பர் 1 ஆம் தேதி, நான்காவதாக ஒரு வழக்கு பதிவானது. ஆறு வயதான சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் அப்பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகத்தினர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
3 வயது சிறுமிக்கு கூட பாதுகாப்பில்லை:
இச்சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்னர், 3 வயதான சிறுமி ஒருவர் பள்ளி ஒன்றில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தினைப் பலமாக்கியது.
இந்த பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், பெங்களூரு போலீஸ் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்தியது.
மேற்கு இந்தியா:
மும்பையில் 5 வயதான குழந்தை ஒன்று கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கந்திவாலி பகுதியில் ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று இறந்து கிடந்தது. பிளாட்பார்ம் பகுதியில் தன்னுடைய தாயுடன் வசித்துவந்த அக்குழந்தை பக்கத்தில் வசித்தவராலேயே இக்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது.
நீளும் எண்ணிக்கை:
இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.... தமிழ்நாட்டினையே உலுக்கிய ஐடி பெண் ஊழியர் உமா மகேஸ்வரி பலாத்காரம், வேலூர் மாணவி கீர்த்திகா பலாத்காரம், உபேர் டாக்ஸி பெண் பயணி பலாத்காரம், பிறந்த சிறு குழந்தை பலாத்காரம், 80 வயது பாட்டி கேரளாவில் பலாத்காரம் என்று இந்த எண்ணிக்கை இந்த வருடத்தில் புலிவால் பிடித்த கதையாக நீண்டு கொண்டேதான் செல்கின்றது.
பிறக்கப்போகும் புதுவருடமாவது பெண்களுக்கு பாதுகாப்பான ஆண்டாக அமையும் என நம்பித்தான் ஆகவேண்டும்!