ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் கொடுத்த 'பிறந்த நாள் பரிசு' ...!
சென்னை: 2011ம் ஆண்டு.. பிப்ரவரி 24ம் தேதி... அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு தேமுதிகவின் மூவர் அணி விஜயம்... சட்டசபைத் தேர்தலை இணைந்து சந்திப்பது என்று ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பெருமையுடன் அறிவித்த நாள்.. இன்று.
எங்கள் அம்மாவின் பிறந்த நாள் பரிசாக இந்தக் கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது தேமுதிக என்று அதிமுக தரப்பு பெருமையுடன் கூறிய நாள்.. இன்று.
திமுகவை வெளியேற்ற வேண்டும், எனவே அதிமுகவுடன் கூட்டணி சேர முடிவெடுத்து இணைந்துள்ளோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய தினம்.. இன்று.
அதிமுகவும், தேமுதிகவும் முதல் முறையாக, அதேசமயம், கடைசி முறையாக இணைந்த தினம் இன்று... வாருங்கள் திரும்பிப் பார்ப்போம்.
முட்டி மோதிய மூன்று கட்சிகள்
இப்போது தேமுதிகவுக்காக காங்கிரஸ், பாஜக, திமுக ஆகிய கட்சிகள் முட்டி மோதியதைப் போல அப்போதும் 3 கட்சிகள் கடுமையாக முயற்சித்தன. அவை அதிமுக, திமுக, காங்கிரஸ்.
திமுகவுக்காக தீவிரமாக முயன்ற மு.க.அழகிரி
திமுவுக்கு தேமுதிகவை கொண்டு வரும் பணியில் அப்போது தீவிரமாக ஈடுபட்டவர் வேறு யாருமல்ல.. சாட்சாத் மு.க.அழகிரிதான்.
வெற்றி அதிமுகவுக்கு
தேமுதிகவை இழுக்கும் போட்டியில் கடைசியில் வெற்றி அதிமுகவுக்கே கிடைத்தது. இதையடுத்து தேமுதிகவின் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த்தின் மச்சான் எல்.கே.சுதீஷ், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் அடங்கிய குழு அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தது.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக குழு
அங்கு அவர்களை ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அடங்கிய அதிமுக குழு வரவேற்று அழைத்துச் சென்றது.
ஒப்பந்தம் இறுதியானது
பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் இறுதியடைந்தன. தேமுதிக தரப்பில் 50 சீட்கள் கேட்கப்பட்ன. அதிமுக 41 தருவதாக கூறியது. அத்துடன் அன்றைய பேச்சுக்கள் முடிவடைந்தன.
14 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி
அப்போதைய எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிகவையும் சேர்த்து 14 கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணியை உருவாக்கினார்.
அம்மா் பிறந்த நாளில் தேமுதிகவின் பரிசு
இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து அதிமுக தரப்பு கூறுகையில், எங்கள் அம்மாவின் பிறந்த நாளன்று இந்தப் பேச்சுவார்த்தையும், ஒப்பந்தமும் சுமூகமாக முடிந்துள்ளது. இது தேமுதிகவினர் எங்களது அம்மாவுக்குக் கொடுத்த பிறந்த நாள் பரிசு என்று பெருமை பொங்கக் கூறினர்.
இன்று...
இன்று தேமுதிகவை இழுக்க காங்கிரஸும், பாஜகவும் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன. தேமுதிகவின் தேவையே இல்லாத அளவுக்கு அதிமுக பலமாகிக் காணப்படுகிறது. தேமுதிக குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த பண்ருட்டியார் இன்று அதிமுகவில் இருக்கிறார். அதேபோல குழுவின் இன்னொரு உறுப்பினராக இருந்த ஆர்.சுந்தரராஜனும் இன்று அதிமுக ஆதரவுக்காரராக இருக்கிறார்... அன்று தேமுதிக கூட்டணிக்காக முயற்சித்த அழகிரி, இன்று அதே தேமுதிக வேண்டும் என்பதற்காக கட்சித் தலைமையால் பலிகடாவாக்கப்பட்டு விட்டார்... அரசியலில் ஒவ்வொரு யுகமும் ஒரு நொடி போல.... அவ்வளவு வேகமாக ஓடி விடும் காலம்!.