வெள்ளத்தில் மூழ்கிய சுடுகாடுகள்.. புதைக்க, எரிக்க வழியில்லை- வீட்டில் வைக்க ஐஸ் பெட்டி இல்லை!
சென்னை: சென்னையில் மயானங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் சடலங்களை புதைக்கக் கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை சுனாமி பாதித்தபோது கரையோரப் பகுதிகளில்இருந்த மயானங்கள் எல்லாம் நீரில் மூழ்கின. இதையடுத்து பலியான ஆயிரக்கணக்கானோர் பெரிய பெரிய குழிகளில் மொத்தமாக புதைக்கப்பட்டனர்.
இப்போது சுனாமியைவிடக் கொடுமையான நிலைமை உருவாகியுள்ளது. மரணமடைந்தவர்களை வீட்டுக்கு வெளியே கொண்டு வர முடியாத அளவுக்கு வெள்ளம் ஒரு பக்கம் என்றால், வீட்டுக்குள் கூட பிணத்தை வைக்க இடமில்லாத சோகம்.
இறந்தவரின் உடலை பரணில் ஏற்றி வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சோகமும் மொட்டை மாடியில் வைத்திருக்க வேண்டிய நிலைமையும் கூட ஏற்பட்டுள்ளது.
உடல்களை எரிக்கவோ, புதைக்கவோ வெளியே கொண்டு செல்ல முடியாத நிலையில், அருகில் ஐஸ் பெட்டிகளோ, ப்ரீசர் பாக்ஸ்களோ கிடைக்காமல் உடல்களை வீட்டுக்குள் துர்வாசம் வரும் வரை வைத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இது போக சைதாப்பேட்டையின் கண்ணம்மாப்பேட்டை மயானம், கிருஷ்ணாம்பேட்டை மயானம், கொளத்தூர் மயானம், மூலக்கொத்தளம் மயானம் என நகரில் உள்ள பெரும்பாலான சுடுகாடுகள் வெள்ள நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
மயானங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்துள்ளதால், இறந்தோரின் உடலைப் புதைப்பதற்குக் குழிகூட வெட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உடல்களை எரிக்கத் தேவையான காய்ந்த விறகுகள் கூட இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலைப் புதைக்கவோ, எரிக்கவோ மிகவும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டேரி மயானத்தில் ஒரு உடலைப் புதைக்க முடியாத நிலையில், அதை மயானத்தில் உள்ள மரத்தில் கட்டிவைத்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின் நெருங்கிய உறவுகள் கூட அந்த வீடுகளுக்கு வந்து சேர முடியாத நிலையும் நிலவுகிறது.
மின்சாரம் இல்லாததால் அரசு மின் மயானங்களிலும் உடல்களை எரிக்க முடியாத நிலை நிலவுகிறது.
புதைக்க, எரிக்க முடியாத உடல்களை அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரேத அறைகளில் ஐஸ் பெட்டிகளில் வைத்து பாதுக்கலாம். இதற்கு மிகக் குறைவான கட்டணமே பெறப்படும்.
கடந்த 3 நாட்களில் சுமார் 10 உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அவர்களது குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.