நெல்லை அருகே திருக்குறுங்குடியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் பத்திரமாக மீட்பு!
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி பகுதியில் மலை மீது அமைந்துள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ளது திருக்குறுங்குடி. இங்குள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில். 4 கி.மீ தூரம் உள்ளது அந்த மலைப் பாதை.
நம்பிமலையில் கோயில்கொண்டிருக்கும் நம்பி ரிஷிகேசனாக மலைமேல் நம்பி என்று அழைக்கப்படுகிறார். மொத்தம் 5 வடிவங்களில் பெருமாள் அருள்பாலிக்கும் தலம் இது. இக்கோயில்களுக்கு இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.
சனிக்கிழமையான இன்று அழகிய நம்பிராயர் கோயிலில் பல சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்து வந்ததால், இங்கு மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் பக்தர்கள் கீழே வரமுடியாமல் மலையில் சிக்கினர். தகவல் அறிந்ததும், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வந்தனர்.