மேற்கு தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை.. அருவிகளில் நீர் ஆர்ப்பரிப்பு.. பல இடங்களில் மண் சரிவு
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மக்களை அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிந்து வருகின்றன. குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக ஏற்ப கனமழையால் நிலச்சரிவு உருவாகி ஏராளமானோர் வீடு,நிலங்களில் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையினால் மேக்கரை கிராமத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் தொடர்ந்து மலையில் இருந்து பாறைக் கற்கள் மற்றும் சிறிய பாறைகள் வனப்பகுதியில் சரிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் செல்வகுமார் அச்சன்புதூர் பகுதிக்கு நேற்று விரைந்து சென்று பார்வையிட்டார்.
மலை உச்சியில் மலைவாழ் மக்கள் இனத்தை சார்ந்த சிபு என்பவர் தனது இரண்டு குழந்தைகளோடு குடியிருந்து வருவது தெரியவந்தது. அவரை அங்கிருந்து பாதுகாப்பாக மேக்கரை கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அங்கு நிலச்சரிவுகள் ஏற்படுகிறதா என மலையோரங்களில் குடியிருந்து வரும் மக்களின் துணையோடு வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மலையில் உருவாகி வரும் பாறைச் சரிவு காரணமாக அந்த பகுதி விவசாய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.