ஜெயலலிதாவுக்கு தீவிரமடைகிறது சிகிச்சை... அப்பல்லோவில் வெளிநாட்டு மருத்துவர்கள்!
சென்னை : உடல் நல சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்லப் போவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 22ம் தேதி இரவில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவ்வப்போது அவரது உடல்நலம் பற்றிய தகவல் வெளியானாலும் தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர், அடுத்தடுத்த பாதிப்புகளால் அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ' தற்போது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் சிவக்குமார் தலைமையில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். முதல்வருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடு போன்றவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. இருப்பினும், சில சிகிச்சை முறைகளுக்கு வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி தேவைப்பட்டது.
இன்று காலை லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட், அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர சிகிக்சை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் முதல்வர் நலம் பெற்றுத் திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போலோ மருத்துவமனையின் நர்ஸ்கள் ஒன்று திரண்டு முதல்வருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனராம். இதனிடையே முதல்வரின் சிகிச்சை பற்றிய குறிப்புகளை கம்யூட்டரில் படித்த இரண்டு நர்ஸ்களை அப்பல்லோ நிர்வாகம் பணியை விட்டு நீக்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications