ராஜீவ் கொலை வழக்கில் குண்டு சாந்தனை சுட்டுக் கொன்றது நானே... சிபிஐ அதிகாரி 'பரபர' தகவல்
சென்னை: ராஜீவ் படுகொலை வழக்கில் திருச்சி சாந்தன் என்கிற குண்டு சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்' என விசாரணை அதிகாரியாக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள பதிவு பெறும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சாந்தன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு எழுச்சிப் பேரணி நடத்தினர். இந்த பேரணியை முன்வைத்து சுதந்திரப் போராட்ட தியாகி மறைந்த ஜெபமணியின் மகனும் சிபிஐ அதிகாரியுமான மோகன்ராஜ் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இவர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ அதிகாரியாக இருந்தவர். அதில் ஒன்று, வைகோ காரு முயற்சியால் ராஜீவ் கொலை குற்றவாளிகள் மூவர் தூக்கு கயிற்றில் இருந்து தப்பிக்கவில்லை. என்னால்தான் மூவரூம் தப்பித்தார்கள். இது அந்த மூவருக்கும் தெரியும். தான் கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க ஒருஇனத்தின் அழிவுக்கு வழி வகுத்து அழித்த பெரும் கிராதகன் வைகோகாரு, அவரை இன்னும் தமிழ் இன போராளியாக நினைக்கும் கூட்டம் சத்தியமாக பாவப்பட்டவர்கள்." என பதிவிட்டிருந்தார்.
அதாவது கேப்டன் டிவியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் சிபிஐ தலைமை அதிகாரியான ரகோத்தமன், ஜெபமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் ரகோத்தமன், ராஜிவ் கொலை வழக்கில் நாங்கள் யாரையும் சித்ரவதை செய்யவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட ஜெபமணி, இது அப்பட்டமான பொய்... அவர்களை சித்ரவதை செய்யத்தான் நாங்கள் இருந்தோம்...அவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் சித்ரவதை செய்தே பெறப்பட்டவை என கூறினார். இதற்கு பதிலடியாக ஜெபமணியைப் பார்த்து, நீங்கள் மட்டும் என்னவாம், திருச்சியில் குண்டு சாந்தனை சுட்டுக் கொன்றவர்தானே என அப்போது ரகோத்தமன் பதிலடி கொடுத்திருந்தார்.
இப்படி சித்ரவதை செய்து வாங்கப்பட்டதே வாக்குமூலம் என்ற தம்முடைய கருத்துதான் மூவரின் விடுதலைக்கு காரணம் என்பதை வைத்து ஜெபமணி மோகன்ராஜ் பதிவிட்டிருந்தார். இதை வீடியோ பதிவாகவும் வெளியிட்டுள்ளார்... அதிலும் பல விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி வேலுச்சாமி பேசுகையில், சிறையில் உள்ள சின்ன சாந்தன் அப்பாவி, குண்டு சாந்தனை உயிருடன் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் எனக் கூறியிருந்தார்.
இது அப்பட்டமான பொய் எனக் கூறி மற்றொரு பதிவையும் போட்டிருக்கிறார் ஜெபமணி மோகன் ராஜ். அதில் "ஆகாசப்புழுகன் #திருச்சி #வேலுச்சாமி. அவர் மீது புகார் கொடுக்கப்போகிறேன். குண்டு சாந்தனின் கள்ளக்காதலை சொல்லவேண்டாம் என்றுதான் நினைத்தேன்.#வேலுச்சாமி சொல்லவைத்து விட்டார்." என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டு சின்ன சாந்தன் யார்? குண்டு சாந்தன் யார் என்ற விவரங்களைப் பதிவிட்டுள்ளார் ஜெபமணி மோகன்ராஜ்.
இதனைத் தொடர்ந்து மீண்டும், குண்டு சாந்தனை சுட்டுக் கொன்றது நானே மற்றொரு பதிவையும் ஜெபமணி மோகன்ராஜ் பதிவிட்டிருக்கிறார். அதில், விடுதலைப்புலி குண்டு சாந்தனை திருச்சியில் வைத்து விடிய காலை 0410 மணிக்கு 3 ஆய்வாளர்கள் 7 ரவுண்ட் சுட்டோம்.நான் பயன்படுத்தியது .38 ரிவால்வர் .மற்றவர்கள் பயன் படுத்தியது 9 எம் எம் பிஸ்டல்.
நான் சுட்டது ஒரு ரவுண்ட் மட்டுமே! குண்டு சாந்தன் இருதயத்தை துளைத்தது என் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டுதான். இது தெரியவந்தவுடன் என் நண்பர்கள் என்னை தூக்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள். லேசாக மழை பெய்துகொண்டு இருந்தது. இந்த காட்சிகள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கின்றன. இது கதை வசனம் இல்லை. ஒரு தேச பக்தன் தன் தேசத்தின் மானம் காக்க துணிச்சலாக கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு." எனப் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பா. ஏகலைவன், நீங்கள் செய்தது தேசபக்தியா? இல்லை தேசத் துரோகமா? என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில் சின்ன சாந்தன், குண்டு சாந்தன் தொடர்பாக ஜெபமணி மோகன்ராஜ், திருச்சி வேலுச்சாமியிடம் கூறியதாக பல்வேறு தகவல்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான பல்வேறு அதிர வைக்கும் பதிவுகளைப் போட்டு வருகிறார் ஜெபமணி மோகன்ராஜ்.
ஜெபமணி விளக்கம்
இது தொடர்பாக நம்முடன் தொலைபேசியில் பேசிய ஜெபமணி கூறியதாவது:
நான்தான் குண்டு சாந்தனை சுட்டுக் கொன்றேன். புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்தான் அவருடைய அறையைக் காட்டிக் கொடுத்தார். சந்திராசாமியிடம் கூலி வாங்கிக் கொண்டுதான் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்தார்கள்.
சாதாரணமாக நம்மூர் போலீசார் கைது செய்தால், பொய்யான வாக்குமூலம் தயாரிப்பார்கள் என்று சொல்லலாம். இந்த வழக்கில் சிபிஐ நேரடியாகத் தலையிட்டது. அவர்கள் ஆதாரமில்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். சிறையில் உள்ள சாந்தனும் குற்றவாளிதான்.
சிபிஐ விசாரணையின் போக்கே வேறு. பொய்யான ஆட்களை குற்றவாளிகளா சேர்க்க மாட்டார்கள். குண்டு வெடிப்பதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தில் ராஜீவ் காந்தியின் அருகில் சின்ன சாந்தன் நின்று கொண்டுள்ளார். அவர் அப்பாவி என்றால் அந்த நேரத்தில் அவருக்கு அங்கு என்ன வேலை?
பேரறிவாளனிடம் விசாரணை நடத்திய போது அவர் சொன்னதில் பல விசயங்களை எடிட் செய்து விட்டனர். அப்பாவிகள் யாரையும் சிபிஐ பிடிக்காது. ராஜீவ் கொலையில் பெரிய குற்றவாளிகள் இன்னமும் வெளியில்தான் இருக்கிறார்கள். எனவேதான், நான் என்னுடைய சிபிஐ வேலையை விட்டு வெளியேறி விட்டேன்.
தன்னுடைய கேப்டன் டிவி பேட்டிதான் தூக்கு தண்டனையில் இருந்து பேரறிவாளன், முருகன், சாந்தன் தப்புவதற்கு காரணம். அதை நீதிபதிகளிடம் காட்டிதான் மூவரையும் தூக்கில் இருந்து தப்ப வைத்தனர்.
இவ்வாறு ஜெபமணி கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கில் இன்னும் என்னென்ன மர்மங்கள் வெளியாகப் போகிறதோ?
சர்ச்சைக்குரிய டிவி விவாதம்: