முத்துக்குமாரசாமி தற்கொலை: ''மாஜி'' அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி
நெல்லை: வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லை வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை வேளாண் பொறியாளர் செந்தில் ஆகியோர் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தலைமை பொறியாளர் செந்தில், நெல்லை நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு பின்னர் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இருவரது காவலும் நீட்டிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு, 17 நாட்களாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் இருந்தார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று மாலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் அவரது ஜாமீன் மனுவை வக்கீல் ராஜூ, நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை, மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது விசாரணைக்கு ஏற்றார். இன்று காலையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.