பக்குவமில்லாதவர்.. மூன்றாம் தர அரசியல்வாதி.. ஜெயக்குமாரை வெளுத்து வாங்கிய கேபி.முனுசாமி!
ஓபிஎஸை நக்கலடித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸை நக்கலடித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதி என்றும் மூன்றாம் தர அரசியல்வாதி என்றும் வெளுத்து வாங்கினார்.
அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். சசிகலா குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டது தாங்கள் நடத்தும் தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி ஓபிஎஸ் கூறினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டியின் போது பதில் கூறினார்.
ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைக்கவில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார். கட்சியின் நலனுக்காகவே அனைவரும் பேசி சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கிண்டலடித்த ஜெயக்குமார்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கே நான்தான் காரணம் என ஓபிஎஸ் கூறுவார் என்றும் அவர் கிண்டலடித்தார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
பக்குவமில்லாத அரசியல்வாதி
அப்போது ஜெயக்குமாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமாரின் பேச்சு அவர் ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதி என்பதை காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
மூன்றாம் தர அரசியல்வாதி
ஜெயக்குமார் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி என்றும் கேபி.முனுசாமி கூறினார். அமைச்சர்கள் ஓபிஎஸ் குறித்த தகாத வார்த்தைகளை பேசிவிட்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தால் எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்களுக்கு எச்சரிக்கை
பயத்தால் வார்த்தைகளை கொட்டிவிட்டு எப்படி இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், மற்றும் எம்பி தம்பிதுரை ஆகியோர் ஓபிஎஸ் குறித்து தவறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேபி முனுசாமி எச்சரித்தார்.