தமிழர் உரிமைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்போம்: திருச்சி கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு
திருச்சி: தமிழர்களின் உரிமை பாதிக்கப்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தமது ஆதரவாளர்களுடன் விலகி தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இந்த கட்சிக்கான கொடியை 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார் வாசன். இதன்படி திருச்சியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது கட்சியின் பெயர் "தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)" என்று ஜி.கே.வாசன் அறிவித்தார். மேலும் கட்சியின் சின்னமாக "சைக்கிள்" இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கொட்டும் இடி, மின்னல், மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:
இன்றைய தினம் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) இயக்கம் தொடங்கப்படுகிறது. தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும், தொண்டர்களாகவும் செயல்படுவோம். தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்துவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பாடுபடும்.
கொள்கை என்ன?
'வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்பதே கட்சியின் கொள்கை. தனி வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, நிர்வாகத்தில் வலிமை என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவோம். காமராஜர் வழியைப் பின்பற்றும் நமது கட்சிக்குத் திரண்டிருக்கும் இந்தக் கூட்டம், தமிழகத்தில் முதன்மை இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் திகழும் என்பதை நிரூபிக்கிறது
எது த.மா.கா?
புதிய பாதை, புதிய பயணம், புதிய வேகம், புதிய எழுச்சி, கடின உழைப்பு இவற்றின் மொத்த உருவம் தான் தமிழ் மாநில காங்கிரஸ். தனி வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, நிர்வாகத்தில் நேர்மை, மக்களுக்கு சேவை செய்வதே நமது கடமை. இது தான் காமராஜர் ஆட்சியின் அடித்தளம்.
இதுதான் காங்கிரஸ்
லட்சக்கணக்கான மக்கள் இங்கு திரண்டு இருப்பதால் இனி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது? என யாரும் கேட்க முடியாது.
இரு கண்களாக...
நான் இந்த கட்சியின் தலைவர் அல்ல. உங்கள் இல்லங்களில் ஒருவனாக. உள்ளங்களில் ஒருவனாக உங்களது சுக துக்கங்களில் பங்கு பெறுபவனாக இருப்பேன். உழைக்கும் மக்களின் நாடி நரம்புகளை உணர்ந்தவன் நான். மக்கள் பணியையும், இயக்க பணியையும் எனது இரு கண்களாக கருதி குக்கிராமம் முதல் நகரம் வரை சுற்றி சுற்றி வருவேன்.
தேச நலனுடன் மாநில கட்சி
சில மாநில கட்சிகள் தமிழர்கள், தமிழ் என்று கூறிக்கொண்டு, தேச ஒற்றுமையைப் புறம்தள்ளுகின்றன. தேசிய கட்சிகளோ, தமிழர்களின் நலனிலே அக்கறை இல்லாமல் செயல்படுகின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தேசிய பார்வை கொண்ட மாநில கட்சியாகத் திகழும்.
காமராஜர் ஆட்சி..
காமராஜர் ஆட்சி என்பதன் பொருள் என்ன? வெளிப்படையான நிர்வாகம், எங்கும் நேர்மை, மக்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றிக்கொடுப்பது. இது தான் காமராஜர் ஆட்சி. அந்த உயர்ந்த லட்சியத்தை நாம் அடைந்தே தீருவோம்.
சரித்திரத்தில்..
ஆனால் அதற்கான பயணம் எளிதானது அல்ல. பல சவால்கள், சோதனைகள் நிறைந்தது. அந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும்.
தியாகத்து தயார்
அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பங்கீடு, இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என தமிழகத்தின் உணர்வுகளுக்காக பாடுபடுவோம். தமிழர்களின் உரிமை பாதிக்கப்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்போம். மதவாத சக்திகளை இந்த பூமியில் தலை எடுக்க விடமாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம். எந்த முடிவு எடுத்தாலும் அதனால் ஏழை எளியோருக்கு பயன் இருக்குமா? என தான் பார்ப்போம்.
மீனவர் பிரச்சனை
அவர்களை பாதிக்கும் எந்த செயலையும் செய்ய மாட்டோம். தொழில் முதலீடுகளை வளர்க்க பாடுபடுவோம். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதை தடுப்போம். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவோம். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதோடு அவர்களுக்கு விதை, பூச்சி மருந்து இலவசமாக வழங்குவோம். இலங்கை அரசு தமிழக மீனவர்களின் வயிற்றில் அடிப்பதற்கு நிரந்தர தீர்வு காண்போம்.
மகளிர் ஒதுக்கீடு
இந்தியாவில் 59 கோடி பெண்களும், தமிழகத்தில் 3 கோடி பெண்களும் உள்ளனர். அவர்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் தகுதி வாய்ந்த ஒதுக்கீடு வழங்குவோம். இளைஞர்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப்படும். கல்வி வணிகமயமாவதை தடுப்போம். மாணவர்களுக்கு இலவச கல்வி கடன் வழங்குவோம். கல்வி கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம்.
கனிம கொள்ளை
கனிம வளம், மணல் கொள்ளையடிப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். ஊழலற்ற ஆட்சியே நமது லட்சியம்.
தமிழகத்தில் லோக்பால்
லோக்பால் சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தி கடைநிலை ஊழியர் முதல் கவர்னர் வரைக்கும் உட்படுத்துவோம். தரமான மருத்துவ வசதியை இலவசமாக வழங்குவோம்.
சால்வை, துண்டு கூடாது
கட்சியின் பெயர் பலகை கிராமம் முதல் நகரம் வரை வைக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து பாடுபட வேண்டும். அப்படி செய்தால் மக்கள் நம்பிக்கையை பெற முடியும். ஆளுகிற கட்சி, ஆண்ட கட்சிகளை விட அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இனி வரும் காலங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் எனக்கு யாரும் சால்வையோ, துண்டோ அணிவிக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.