அன்று சத்துணவு அமைப்பாளர் வனரோஜா.. இன்று திருவண்ணாமலை எம்.பி. வேட்பாளர்
அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா லோக்சபா தேர்தலுக்கான இன்று 40 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்தார். அவர்களில் திருவண்ணாமலை வேட்பாளர் வனரோஜா, சத்துணவு அமைப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
திருவண்ணாமலை வனரோஜா
திருவண்ணாமலை தொகுதியில் சு. வனரோஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமம்.
சத்துணவு அமைப்பாளராக இருந்த வனரோஜா அதை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக உள்ளார். வேலூர், திருவண்ணாமலை பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சத்துணவு அமைப்பாளராக சரோஜாவை, உப்பிலியாபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தி எம்.எல்.ஏ.வாக்கினார். தற்போது ஜெயலலிதா, சத்துணவு அமைப்பாளராக இருந்த வனரோஜாவை எம்.பி. வேட்பாளராக அறிவித்துள்ளார்.
தருமபுரி மோகன்
தருமபுரி தொகுதி அதிமுக வேட்பாளராக பி.எஸ்.மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். 61 வயதாகும் மோகன் அதிமுகவின் மூத்த நிர்வாகி. பி.எஸ்.சி பி.எல்., படித்துள்ள இவர் வன்னிய கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
தற்போது தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் இருக்கும் மோகன் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றிவர். இவரது தந்தை மறைந்த சாமிநாதன் ராணுவ வீரர். தாயார் பெயர் சிவகாமியம்மாள், மனைவி பூங்கோதை, மூத்த மகன் ஜெயவிக்னேஷ் பி.இ படித்துள்ளார். இளையமகன் டாக்டர் தினேஷ் தற்போது சென்னையில் பணிபுரிகின்றார்.
அதிமுக நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாதவர் என்ற ஒரே ஒரு குறை மட்டும் இவர் மீது அதிமுக தொண்டர்களிடம் இருக்கிறது.
வேலூர் செங்குட்டுவன்
வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செங்குட்டுவன் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக உள்ளார். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சியில் இருந்து அதிமுகவுக்கு தாவியவர்.
வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
தஞ்சை பரசுராமன்
தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கு.பரசுராமன் ஒரத்தநாடு அருகில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அமைச்சர் வைத்திலிங்கத்தின் தொழில் பார்ட்னர் என்று கூறப்படுகிறது.
இவர் தஞ்சை நகரை ஒட்டியுள்ள நீலகிரி ஊராட்சிமன்றத் தலைவராகவும் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளராகவும் பதவிகள் வகித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதணைகள் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி அசோக்குமார்
கிருஷ்ணகிரி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அவை தலைவராக உள்ளார். இவரது பூர்விகம் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள முல்லை கிராமம்.
இவரது தந்தை பெயர் டி.கே.கிருஷ்ணசாமி, தாயார் யசோதம்மாள். பிரதீப்குமார், உதயகுமார், ரவிகுமார் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர், அசோக்குமாரை தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அசோக்குமார் மட்டும் தனது தயார் யசோதம்மாளுடன் கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரில் குடியிருந்து வருகின்றார்.
பி.எஸ்.சி. படித்தவர் அசோக்குமார். 17 ஆண்டுகாலம் வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளராகவும், பிறகு அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும், பிறகு அதிமுக மாவட்ட இணைசெயலாளராகவும் பணியாற்றினார். தற்போது அதிமுக மாவட்ட செயலாளரகவும் பதவி வகித்து வருகிறார்.